வியாழன், 27 ஆகஸ்ட், 2026

பெண் அல்ல பொன்



ஆகஸ்ட் 25 2026, இரவு சுமார் 8:30 மணி, ஜெம்ஸ் வளாகத்திலிருக்கும் சகோதரன் இம்மான் வீட்டில், அவருக்குப் பிறந்திருக்கும் மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையைப் பார்ப்பதற்காக, இரண்டு சிறிய ஆடைகளுடன், மழைத் தூரல் விழுந்துகொண்டிருந்ததால், குடை பிடித்த வண்ணமாக நானும் எனது மனைவியும் புறப்பட்டுச் சென்றோம். சகோதரன் இம்மான் வீட்டை அடைந்ததும், குடையினை மடித்து வாசலுக்கு வெளியே நீர் வழிய வைத்துவிட்டு, வாசற்கதவினை மெதுவாகத் தட்டினோம். சிரித்த முகத்துடன் 'வாங்க' என்ற வரவேற்பு வார்த்தையுடன் கதவினைத் திறந்தார் சகோதரன் இம்மான். முதல் ஆளாக மனைவி வீட்டினுள்ளே காலடி எடுத்துவைத்தாள்; தொடர்ந்து, பின்னால் நான் பிரவேசித்தேன்.  வீட்டினுள் நுழைந்ததும், சகோதரன் இம்மானுவின் மூத்த மகளான, நான் 'ஜிங்குஜா' என்று அழைக்கும் ஜின்ஷா அழுதுகொண்டிருந்தாள். வரவேற்பறையின் இருக்கையிலோ குழந்தையுடன் அமர்ந்திருந்தார் சகோதரன் இம்மானுவின் மனைவி. 

ஜிங்குஜாவின் அழுகையைக் கண்ட நான், 'ஏன் அழுகிறாள்?' என்று கேட்டதும், 'அப்பா திட்டிவிட்டார்கள்' என்று பதிலளித்தார் அவளது தாய். இதனை நான் கேட்டதும், வரவேற்ற முகத்துடன், இரண்டு இருக்கைகளை எடுத்துவந்து, 'அமருங்கள்' என்று சொல்லி, எங்களை அமரச்செய்துவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்த சகோதரனை 'பிள்ளையை ஏன் அடித்தாய்?' என்று விளையாட்டாக நான் எனது வலதுகரத்தினால் மூன்று முறை அடித்து முடிப்பதற்குள், இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மகள் ஜிங்குஜா வெகுண்டு எழுந்தவளாக, என்னை நோக்கி ஓடிவந்து எனது தொடையினை தனது இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு கடிக்க முற்பட்டாள். இக்காட்சியைக் கண்டதும் நான் மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தேன். தன்னை தகப்பன் அடித்திருந்தாலும், தகப்பனை எவரும் அடிக்க அனுமதிக்காத அந்த பிஞ்சு உள்ளத்தினைப் பார்த்து, 'உன்னிடத்திலும் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியவைகள் இருக்கிறது' என்று சொன்னேன். அவளது தப்பனிடத்தில், 'இவள் பெண் அல்ல உனக்குக் கிடைத்த பொன்' என்று சொல்லி எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டேன். தன்னைத் தண்டித்திருந்தாலும், தகப்பன் மீதிருந்த பாசம் அவளுக்குத் தணிந்துபோகவில்லையே! 

அநேக நேரங்களில், இவ்வுலகத்தில், சோதனைகளை நாம் எதிர்கொள்ளும்போது, பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, நமது பரம தகப்பனாகிய பிதாவின் மீது நாம் வைத்திருக்கின்ற பாசத்தினை விட்டுவிடுகின்றோம். அவர் நம்முடன் பேசும் வேத தியானத்தையும், நாம் அவருடன் பேசும் ஜெப நேரத்தையும் விட்டுக்கொடுத்துவிடுகின்றோம். அல்லது, தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? (எபி. 12:7) என்ற வசனத்தின்படி, நம்முடைய தவறுகளின் நிமித்தமாக, தகப்பன் என்ற ஸ்தானத்திலிருந்து அவர் நம்மை சிட்சிக்கும்போது, சிட்சைக்குக் காரணமான நமது தவறுகளிலிருந்து திருந்தாமல், அவரை விட்டு மேலும் தூரமாகப் பயணித்துவிடுகின்றோம். நம்முடைய வாழ்க்கையில், எத்தகைய சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிட்டாலும், பரமப் பிதாவை விட்டுக்கொடுக்காத, சிறு பிள்ளைகளைப் போன்ற உன்ளத்தை ஆண்டவர் நமக்கும் தருவாராக

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

ஊரைப் பார்க்கும் உடல்



ஏப்ரல் 12, 2026, சில பொருட்களை வாங்கும் படியாக, பீகார் மாநிலத்தின் டெஹ்ரி ஆன் சோன் பட்டணத்தில் உள்ள Smart Bazar கடைக்கு மனைவியுடன் சென்றிருந்தேன். கீழ் தளத்தில் வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை வாங்கினதைத் தொடர்ந்து, கடையின் முதல் தளத்தில் ஆடைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் நுழைந்த நாங்கள், அங்கே தொங்கவிடப்பட்டிருந்த ஆடைகளைப் பார்த்தவாறு, அவைகளில் சில உடைகளைப் பிள்ளைகளுக்கென தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்தவைகளில் பழுதுகள் ஏதுமிருக்கிறதா எனப் பார்த்தவாறு, ஆடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் பிற பகுதிகளுக்கும் சென்று அவைகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, திடீரென எனது கண்ணில் பட்டது ஒரு ஆடை. தவறுதலாக இங்கே தொங்கவிட்டுவிட்டார்களோ? என்ற கேள்வியுடனான ஐயம் ஒருபுறம் எனது சிந்தையில் எழ, சற்றும் தாமதிக்காது, அருகில் சென்று அதனைப் பார்த்துவிட விரைந்தேன். கரங்களில் அதனை எடுத்து பார்த்தபோதோ, எனது தலையே சுற்றும்போலிருந்தது, 'ஆம், அதன் விலை ரூபாய் 999 என்று குறிப்பிடப்பட்டிருந்தது'. யார் இதனை அணிவார்கள்? இதனை அணிந்தால் தொடையில் இருக்கும் ஓட்டையில் மற்றும் ஆங்காங்கே காணப்படும் ஓட்டைகள் அனைத்தின் வழியாக உடல் ஊரை எட்டிப்பார்க்குமே! அல்லது, ஊர் அதனை அணிந்து செல்பவரின் உடலை எட்டிப்பார்க்குமே! என்று நினைத்துக்கொண்டிருந்தபோது. 'உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு,  நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு' (1தீமோ. 4:12) என்ற வசனத்தை நினைவுகூர்ந்தேன். 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே! நாகரீகம் என்ற பெயரில், அநாகரீகத்தை அரங்கேற்றி, இன்றைய சமுதாயத்தை அலங்கோலமாக மாற்றிவருகிறது உலகம். இருதயத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு இடமளித்திருக்கும் நாம், 'ஆவியானவரின் ஆலயமாயிருக்கிற நம்முடைய சரீரத்தை' அலங்கோலமாக மாற்றிவிடக்கூடாதே! ஆத்துமாவை எப்படி காத்துக்கொள்ளுகிறோம் என்பதில் மாத்திரமல்ல, ஆயலத்தையும் எப்படி பராமரிக்கிறோம் என்பதையும் பார்க்கிறவர் நமது ஆண்டவர். ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம் (1கொரி. 3:17) என்ற வசத்தின்படி, ஆலயமாகிய சரீரத்தை, ஆண்டவருக்குப் பிரியமாகக் காத்துக்கொள்ளுவோம். 

கல்லறைக்கு வெள்ளையடித்த காலம் போய், வெள்ளை அறைக்கு (இயேசுவை ஏற்றுக்கொண்டோர்க்கு) கல்லறை துணி போர்த்தும் காலம் இது கவனம்.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

சாய்வு நாற்காலி

                      சாய்வு நாற்காலி


அது ஒரு மாலை நேரம், தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைக்குக் குடும்பத்துடன் சென்று வந்த களைப்புடன் இருந்த நான், வீட்டினுள் நுழைந்ததும், சற்று அமர விரும்பி, கண்களால் நாற்காலியைத் துலாவித் தேடி, இறுதியில், உள்ளறையில் யாருமில்லாத இடத்தில், ஓய்வெடுப்பதற்கு வசதியாக நிலையில், காலியாகக் கிடந்த ஓர் 'சாய்வு நாற்காலியைக்' கண்டு விரைந்து சென்று அதிலே சரிந்தேன். சாய்வு நாற்காலி எனும் தொட்டிலில் கிடந்த என்னைத் தாலாட்டுவதுபோல, குழந்தைகளில் சத்தங்கள் வீட்டினுள் ஒலித்துக்கொண்டிருந்தன. களைப்பு ஒருபுறம் என் கண்களை மூடச் செய்துகொண்டிருந்தபோதிலும், காதுகள் இரண்டும் கேட்கும் திறனை இழக்குமளவிற்கு தூக்கத்திற்குள் நான் சென்றுவிடவில்லை. சுமார் முக்கால் மணிநேரம் மனைவி, மகள் மற்றும் மருமகள்கள் பேசிக்கொண்டிருந்த வார்த்தைகளுக்கெல்லாம் முயன்ற அளவு முணங்கிக்கொண்டே பதிலளித்துக்கொண்டிருந்தேன். அச்சமயம், திடீரென ஒரு பாடலுக்கு நடனமாடத் தொடங்கிய என் இளைய மருமகளைக் கண்டதும், விழிகள் விரிவடைய, கைபேசியில் அதனைப் பதிவு செய்யவேண்டும் என்ற விருப்பத்தில், சற்று தூரத்திலிருந்த கைபேசியை எடுக்க விருட்டென சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தபோது, சாய்வு நாற்காலியிலிருந்து, 'டக்' என்ற ஒலி எழும்ப, நாற்காலி உடைந்துவிட்டதோ என்று உடனே சற்று கீழே உற்றுப் பார்த்தேன். எனினும், கண்ணுக்கு எதுவும் தென்படாததால், கைபேசியை எடுத்தவனாக, மீண்டும் அதே சாய்வு நாற்காலியில் சரிந்தமர்ந்தவனாக, சின்ன மருமகளின் நடனத்தை கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்தேன். 

சுமார் அரை மணி நேரத்திற்குப் பின், மீண்டும் சாய்வு நாற்காலியை விட்டு நான் எழுந்தபோது, மீண்டும் 'டக்' என்ற சத்தம் கேட்க, எனது ஆடையை ஏதோ ஒன்று பிடித்து இழுத்ததைப் போன்ற உணர்வினால், திரும்பிப் பார்த்தபோது, எனது கால்சட்டை கிழிந்திருப்பதைக் கண்டேன். ஆம், நான் உட்கார்ந்திருந்த சாய்வு நாற்காலியில், மிகச் சிறிய அளவில் ஒரு இரும்பு ஆணியின் முனை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. என்றபோதிலும், நான் அதை அதிகம் பொருட்படுத்தாது, தொடர்ந்து அந்த சாய்வு நாற்காலியை உபயோகித்துவந்தேன். ஆணியிருக்கும் இடத்தை அறிந்திருந்ததினால், அதற்கேற்றாற்போல் பொறுமையாக அமர்ந்து எழுந்து எனது ஆடையைக் கிழியாதபடிப் பார்த்துக்கொண்டேன். 

ஒருநாள், ஒரு இரவு வேளை, தனது பெரியம்மா வாங்கிக்கொடுத்த புதிய ஆடையினை உடுத்தினவளாக வீட்டினுள் வலம் வந்துகொண்டிருந்தாள் எனது மகள். நான் அமர்ந்தெழுந்த அதே நாற்காலியில் அவளும் அமர்ந்த வண்ணம் குழந்தைகளோடு விளையாண்டுகொண்டிருந்தாள். மறுநாளில், அவளது உடுப்பு ஆங்காங்கே கிழிந்துபோயிருந்ததைக் கண்ட என் மனைவி, அந்த புதிய உடுப்பு எப்படி கிழிந்தது என்று ஆராய்ந்துகொண்டிருந்தாள்; என்றபோதிலும், மனைவிக்கும் மற்றும் மகளுக்கும் விடை கிடைக்கவில்லை. அந்நேரம் அறையின் உள்ளே நுழைந்த நான், அவர்களது ஆராய்ச்சிக்கான விடையினைச் சொல்ல, 'இந்த சாய்வு நாற்காலியில் ஆணி நீட்டிக்கொண்டிருக்கிறது' என்று ஏன் முன்னமே சொல்லவில்லை? சொல்லியிருந்தால், மகளின் உடுப்பு கிழிந்திருக்காதே என்ற கேள்வியோடு கூடிய விடையினை என் மனைவியின் உதடுகள் உதிர்க்க, அங்கே வந்த எனது மனைவியின் மூத்த சகோதரர் ஒரு துணியினால் அந்த ஆணியினைச் சுற்றி, மற்றவர்கள் ஆடையைக் கிழிக்காதபடி அதனை மூடினார். இந்நிகழ்வைக் கண்ட எனது ஆத்துமாவில், 'ஆன்மீகப் பதிலொன்று தொற்றிக்கொண்டது.' 

பிரியமானவர்களே! அநேக நேரங்களில் வழியில் கிடக்கும் முள்களை நாம் அறிந்தபடியினால் அவைகளுக்கு விலகிச் சென்றுவிடுகின்றோம்; ஆனால், மற்றவர் மிதிக்கும்படி அவைகளை அவ்விடத்திலேயே விட்டுவிடுகின்றோம். ஒரு மனிதனின் தவற்றினை வெளிப்படுத்திவிடக்கூடாது என்ற எண்ணத்தில், மற்றவர்களை அந்த மனிதன் செய்யும் தவற்றில் சிக்கவைத்துவிடுகின்றோம்.  நம்மைக் காப்பது மாத்திரமல்ல, நம்மைத் தொடருவோரையும் காப்பாற்றும் பொறுப்பு நம்முடைய கரத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றதே!




வெள்ளி, 3 நவம்பர், 2023

'பூமியதிர்ச்சி'

 'பூமியதிர்ச்சி'


3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேசிக்கொண்டிருந்ததைக் கேட்ட நான், அவர்களது வார்த்தைகளிலிருந்து, 'பூமி அதிர்ச்சி' வந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். கைபேசியை எடுத்து 'google' ல் தேடிப் பார்க்க, பீஹாருக்கு அருகிலிருக்கும் நேபாளில் 6.4 ரிக்டர் அளவில் 11.32 –க்கு பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக செய்தி பதிவிடப்பட்டிருந்தது. பூமி அதிர்ச்சி வந்ததைக் காண்பிக்கும் செயலிகளை (app) கைபேசியில் பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை அறிய முற்பட்டுக்கொண்டிருந்தேன் நான். 

வீட்டின் வெளியிலோ, திடீரென ஏற்பட்ட பூமி அதிர்ச்சியின்போது வீட்டில் தாங்கள் சந்தித்த அனுபவங்களையும், மற்றும் முன் நாட்களில் பூமி அதிர்ச்சியின்போது தாங்கள் சந்தித்த அனுபவங்களையும் பேசி முடித்து, ஜனசந்தடி அடங்க சற்று நேரம் பிடித்தது, மணியோ 12.00 நள்ளிரவைத் தொட்டது. ஒருபுறம் எனது மகன் பூமி அதிர்ச்சியைக் குறித்து தனது கைபேசியில் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். ஆங்காங்கே இருந்த வீடுகள் அனைத்திலும் விளக்குகளால் இரவு வெளிச்சமாகியிருந்தது. தொடர்ச்சியாக மேலும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்ற எண்ணத்துடனும், பயத்துடனும் படுக்கையில் கிடைத்த தூக்கத்துக்குத் தூரமானவர்களாக சில நிமிடங்களைக் கழித்தவர்களாக அனைவரும் நின்றுகொண்டிருந்தோம். பூமி அதிர்ச்சி பூஜ்யமாகிவிட்டது, இனி ஒன்றுமில்லை, என்ற தைரியம் உண்டானதும், அனைவரும் வெளியிலிருந்து வீடுகளுக்குள் நுழைய, நானும், மனைவியும் மற்றும் மகனும் வீட்டிற்குள் நுழைந்தோம். வீட்டினுள் படுக்கையில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகளை தொந்தரவு செய்யாமல், தூக்கத்தைத் தொடர்ந்தோம். 

4 நவம்பர் 2023, காலை 7.15 மணி, தூங்கி எழுந்து அனைவரும் தேனீர் அருந்தி அமர்ந்திருந்தபோது, நான் எனது மகளை நோக்கி, 'நேற்று பூமி அதிர்ச்சி வந்தது' என்று சொல்ல, எனது வார்த்தைகளை நம்பாத அவள், உடனே படுக்கையிலிருந்து எழுந்து, தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள, அடுப்பறையிலிருந்த தாயினிடத்திற்கு ஓடிச்சென்றவளாக, 'அம்மா, நேற்று பூமி அதிர்ச்சி வந்ததா?' என்று கேட்டாள். எனது மனைவியும், 'ஆம், பூமி அதிர்ச்சி வந்தது; நீ நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாய், உன்னை வீட்டிற்குள் போட்டுவிட்டு நாங்கள் வெளியே சென்றோம்' என்று சொல்ல, உடனே அவள் எங்களை நோக்கி, 'துரோகிகள் நீங்கள்' என்ற வார்த்தையை தூக்கி வீசினாள். அவளது கோபமான வார்த்தைகளைக் கேட்டவர்களாக, நாங்கள் அவளருகே சிரித்துக்கொண்டு நின்றபோது, சற்றும் தாமதமின்றி, உடனே, 'நான் நேற்றே இயேசப்பாகிட்ட எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டுட்டுதான் தூங்கினேன்' என்றாள். அவளது இந்த வரிகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மகளது மனதில் ஆழமாக எழுதப்பட்டிருந்த இந்த மௌன வரிகளை, அவளது வாய் வாசித்தது, காலையிலேயே எனது காதுக்கு இன்பமாயிருந்தது. 

4 நவம்பர் 2023, இரவு 8:45 மணி, ATM க்குச் சென்று, பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த நான், அதனை வைக்கும்படியாக எனது மணிபர்சை எடுத்தபோது, அது ரூபாய் நோட்டுகளினால் நிறைந்திருந்தது; மற்றும் அதற்குள் திணிக்கப்பட்டிருந்த சில்லறைகளால் மடித்து மூடக்கூட இயலாத அளவிற்கு அதன் வயிறு புடைத்துத் தள்ளிக்கொண்டிருந்தது. சில மணி நேரத்திற்கு முன் அது காலியாக இருந்ததினால்தான் நான் ATM-க்குச் சென்று செலவிற்காக கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வந்தேன்; அப்படியிருக்க, இத்தனை பணம் எங்கிருந்து வந்தது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தபோது, அருகிலே கீழே விழுந்து கிடந்த எனது மகளது மணிபர்ஸ் எனது கண்களில் பட, அதனை எடுத்துத் திறந்து பார்த்தபோது, அதுவோ காலியாக பரிதாபமாக வெறுமையாகக் காட்சியளித்தது. ஆலயத்திற்குச் செல்லும்போது காணிக்கை போடுவதற்காகவும், ஊருக்குச் செல்லும்போது செலவு செய்வதற்காகவும் எனது மகள் அவ்வப்போது என்னிடம் கேட்கும் பணத்தை நான் கொடுப்பதுண்டு, அவளும் என்னிடம் கேட்டு சில நேரங்களில் பணத்தை எடுத்து தனது பணப்பையில் வைத்துக்கொள்ளுவதுண்டு, சில நேரங்களில் ஏதாவது போட்டியில் அல்லது விளையாட்டில் நான் அவளிடம் தோற்றுவிட்டால் 10 அல்லது 20 ருபாயை என்னிடமிருந்து வாங்கி அதிலே சேர்த்துவைப்பதுண்டு. அப்படியிருக்க, காலியாகக் கிடந்த அவளது பணப்பையைக் கண்டதும், படுக்கையில் அமர்ந்திருந்த எனது மகளை நோக்கி, 'ஜெரின், என்ன ஆயிற்று? உனது பர்சில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து ஏன் அப்பா பர்சில் வைத்துவிட்டாய்?' என்று நான் கேட்க, 'அந்திக் கிறிஸ்து வருவான், அப்போ உங்க பர்சில இருந்து நான் எடுத்து எனது பர்சில வச்ச பணத்த பார்த்தா, என்னை அவன் புடுச்சிக்கிடுவான்' என்றாள். எனக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை; என்றாலும், ஏதோ 'அந்திக்கிறிஸ்து' என்ற வார்த்தையை எங்கோ கேட்டிருக்கிறாள்; எனவே பூமியதிர்ச்சி வந்தபோது, அவனைக் குறித்த பயம் வந்துவிட்டது என நினைத்துக்கொண்டவனாக அவளை நோக்கி: 'ஜெரின், நீ அப்பா பர்சில இருந்து பணத்த எடுக்கிறது எல்லாம் திருட்டு இல்ல, நீ என் பர்சில இருந்து எடுக்கிறது எனக்கு நல்லாவே தெரியும், எனக்கு தேவைப்படும்போது நான் உன் பர்சில இருந்து எடுத்துக்கொள்ளுவேன், மற்றவங்ககிட்டயிருந்து தான் எடுக்கக்கூடாது ' என்று சொன்னதோடு, என் பர்சில் அவள் வைத்த அத்தனை பணத்தையும் எடுத்து மீண்டும் அவள் பர்சிலேயே வைத்தேன். ஒரு பூமியதிர்ச்சி எத்தனை பெரிய பாடத்தையெல்லாம் என் மகளுக்குப் புரியவைத்திருக்கிறது என்பது தெளிவான நேரம் அது. 


வியாழன், 2 நவம்பர், 2023

ஒட்டி வந்த அப்பம்

 ஒட்டி வந்த அப்பம்



19 மார்ச் 2017 காலை ஞாயிறு ஆராதனை, வேலூர் காந்திநகர் ஆலயத்தில் மனைவி மற்றும் எனது மூன்றரை வயது மகளுடன் பங்கேற்றேன். ஆராதனை நேரத்தில் மகள் அதிகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தாள். திருவிருந்து வேளை வந்தது, மகளது தொந்தரவினால் மனைவி திருவிருந்தில் பங்கேற்காத நிலையில் காணப்பட்டாள். நான் எழுந்து சென்று திருவிருந்திற்காக முழங்கால் படியிட்டேன். போதகர் எனக்கு அப்பம் கொடுக்க முயற்சித்தபோது, அவரது கரத்தில் இரண்டு அப்பங்கள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு வந்தன. அந்த இரண்டு அப்பங்களையும் தனித்தனியாகப் பிரித்து ஒன்றை மட்டும் எனது கரத்தில் கொடுக்க போதகர் முயற்சித்தார், என்றபோதிலும் போதகரால் இயலாமல் போகவே, இரண்டு அப்பங்களையும் எனது கரத்தில் கொடுத்து விட்டுச் சென்றார். பந்தியிலிருந்து நான் எழுந்து மனைவி அருகில் வந்ததும் இரண்டு கிடைத்ததற்கான ரகசியம் புரிந்தது; தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்ற வசனம் விளங்கியது.

சாத்தியமில்லாதது சாத்தியமானது

 சாத்தியமில்லாதது சாத்தியமானது



2016 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தென்னிந்திய திருச்சபை ஒன்றின் காலை ஆராதனையில் செய்தியளிக்கும்படியாக மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். நாங்குநேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கடந்த பள்ளம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானேன்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின், பல மாதங்கள் கழித்து, எழுந்து நடமாடும் பெலன் வந்ததும், சேதப்பட்டுக் கிடந்த இருசக்கர வாகனத்தை சரிசெய்ய விரும்பினேன். என்றபோதிலும், அச்சமயம் அதற்கான பணம் இல்லாததினால், அருகிலுள்ள கடைக்கு வாகனத்தை கொண்டு சென்று, எவ்வளவு செலவாகும் என்ற தோராயமான ஒர் மதிப்பீட்டைத் தரும்படி கேட்டுக்கொண்டேன். கடை ஊழியர்களோ,  வாகனத்தை கடையில் விட்டு விட்டுச் செல்லுங்கள், இரண்டு நாட்களுக்குள் மதிப்பீடு தருகிறோம் என்றார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்கள் வாகனத்தின் வேலை முடிந்துவிட்டது, உடனே வந்து எடுத்துக்கொள்ளுங்கள்' என்று மறுமுனையிலிருந்து வந்த குரலைக் கேட்டதும், அதிர்ந்துபோனேன். மதிப்பீடுதானே கேட்டிருந்தேன், வேலை செய்யும்படி நான் சொல்லவில்லையே என்றேன். 'சார், இரண்டு நாட்களாக கடையில் வாகனங்கள் பழுது பார்க்கும் வேலை அதிகம் நடைபெறவில்லை, எனவே உங்கள் வாகனத்தின் வேலையை உடனே முடித்துவிட்டோம் என்று உற்சாகமாகச் சொன்னார் கடை ஊழியர். 

கையில் காசு இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில், நான் 'நிற்பது கூட பிடிக்காமல், காலை வாரி கீழே விழவைத்துதிட்டார்களே' என்று உதறத்தொடங்கிய என் உள்ளத்தின் சத்தத்தை கடைக்காரரிடம் உதடுகள் சொல்லவில்லை. என்றாலும், எவ்வளவு பணம் என்று கேட்டபோது, 11584.00 ரூபாய் என்ற அடி செவியில் விழுந்தது.

சாத்தியமே இல்லை என்பதை அறிந்துகொண்டவனாக, என்ன செய்வது? என்ற கேள்வியே மாத்திரமே மனதில் கேட்டுக்கொண்டு, வீட்டில் படுத்திருந்தேன். 

கர்த்தரின் கைவிரல் எழுத்துக்கள் ராஜாவை கலங்கப்பண்ணினது போல, கடைக்காரர் சொன்ன 11584.00 ரூபாய் என்ற வார்த்தைகள் என்னைக் கலங்கப்பண்ணினது. வாகனத்தை யாரிடமாவது விற்றுவிட்டு, அவர் தரும் தொகையினைக் கொண்டு வாகனத்தை எடுத்து வாங்குபவரிடம் கொடுத்துவிடவேண்டியதுதான் என்ற முடிவினையே என் மனம் இறுதியாக எடுத்தது.

விற்பனை செய்வதற்காக தகுந்த நபரைத் தேடிக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்கள் ஆனது. கடையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துவிடுமோ என யோசித்துக்கொண்டேயிருந்தேன். 

அப்போது திடீரென அயல்நாட்டிலிருந்து ஒர் தொலைபேசி வந்தது. மகளுக்குப் பிறந்தநாள், எனவே  யாராவது ஒரு ஊழியருக்கு காணிக்கை கொடுக்க நினைத்தோம், கடைசியாக உங்கள் பெயர் தான் நினைவுக்கு வந்தது, எனவே, இரண்டு நாட்களுக்கு முன் உங்களது வங்கிக் கணக்கில் 12000 ரூபாய் போட்டிருக்கிறோம், கிடைத்ததா? என்று அந்த சகோதரர் என்னிடத்தில் கேட்டபோது, ''பார்க்கவில்லை'' என பதில் சொன்னேன்.

அந்த சகோதரருடன் பேசி முடித்ததும், ATM க்குச் சென்று பார்த்தபோது, ரூபாய் 12000 எனது கணக்கில் வந்திருந்தது. அதனை எடுத்துக்கொண்டு கடைக்குச் சென்றேன். எனது வாகனத்தை மெக்கானிக் ஒருவர் தள்ளிக்கொண்டு வந்து, பெட்ரோல் போட்டுக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கொடுத்தார். 11584 ரூபாயை கடைக்குக் கொடுத்துவிட்டு, மீதமிருந்த பணத்திற்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு வீடு திரும்பினேன். 

'ஆபத்திலும் அவர் ஆயத்தம் செய்பவர் என்பதை என் மனது அன்று புரிந்து கொண்டது.'

பீடியுடன் நின்ற பணியாளர்

பீடியுடன் நின்ற பணியாளர்


23 ஜுலை 2017, தமிழகத்தின் ஆலயம் ஒன்றில் செய்தியளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தேன். சகல ஆயத்தங்களுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றேன். அதுவரை அந்த ஆலயத்திற்கு செய்தியளிக்கும்படி நான் சென்றதில்லை. எனவே, அழைத்தவர்கள் சொன்ன அடையாளங்களின்படி அந்த ஊரைச் சென்றடைந்து ஆலயத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். இருபுறமும் வியாபாரத்தை மும்முரமாய்ச் செய்துகொண்டிருக்கும் கடைகள் அமைந்திருக்கும் சாலையின் வழியாக, இடது வலது புறம் திரும்பிப் பார்த்தவனாக, மெல்ல ஊருக்குள் சென்றுகொண்டிருந்தேன். 

அப்போது, திடீரென கண்ணில் பட்ட ஒர் ஆலயத்தைக் கண்டு, செய்தியளிக்கவேண்டிய ஆலயம் இதுவாகத்தானிருக்குமோ என எட்டிப் பார்த்தவனாக சாலையின் அடுத்த பக்கத்தில் கொண்டிருந்தேன். ஆலயத்தின் முன்புறக் கோட்டைச் சுவரின் இரும்பு வாசலுக்கு வெளியே ஓர் மனிதர் பீடி குடித்துக்கொண்டு நின்றார். அந்த மனிதருக்கும் ஆலயத்திற்கும் என்ன சம்மந்தம் இருக்கப்போகிறது என்று கணித்தவனாக நின்றுகொண்டிருந்தேன்.

அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்த என்னை பீடி குடித்துக்கொண்டிருந்த மனிதர் கண்டதும், பீடியைக்  குடித்துக்கொண்டே என்னை நோக்கி வந்தார். 'நீங்க இந்த கோயிலுக்கா வந்திருக்கீங்க?' என்று என்னிடம் கேட்டார். இவர் ஏன் என்னிடத்தில் கேட்கிறார்? என்ற கேள்வி உள்ளத்தின் ஒரு புறத்தில் எழுந்தாலும், உதட்டளவில் 'ஆம்' என்று பதில் சொன்னேன். எனது பதிலைக் கேட்டதும், இன்னும் பக்கத்தில் வந்தார். கையிலிருந்த பீடியை கடைசியாகக் புகைத்து முடித்தபின்பு, அதனைக் கீழே போட்டு செருப்புக் காலால் நசுக்கி அணைத்தார். 

இத்தனையாய் விசாரிக்கின்றீர்களே, நீங்கள் யார்? என்று அந்த மனிதரைக் கேட்டபோது, 'நான்தான் இந்த கோவிலின் கோயில்குட்டியார்' என்று பதில் வந்ததைக் கேட்டு, அதிர்ந்துபோனேன். 'பிரசங்கியார் வருவார் பார்த்துக்கொள்ளுங்கள் என்று என்னிடத்தில் சொல்லியிருந்தார்கள், எனவேதான் வெளியே நின்று உங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்' என்றார். பிரசங்கியாருக்கு முன் பீடி குடித்ததைக் குறித்து எந்த ஒரு பதட்டமும் அவர் முகத்தில் காணப்படவில்லை. சற்று நேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'தான் ஒரு இந்து மனிதர் என்றும், விக்கிரகங்களை வணங்குபவர் என்றும், வேலையில்லாதிருந்த தனக்கு இந்த ஆலயத்தில் கோயில்குட்டியாராக வேலைபோட்டுக்கொடுத்தார்கள் என்றும், எனது மனைவி கோவிலை சுத்தம் செய்வாள், என்றாலும், பெண்கள் ஆலயத்தின் எல்லா பகுதிகளுக்கும் போகமுடிவதில்லையே, எனவே, சிலுவை இருக்கும் உட்பகுதியை நான் சுத்தம் செய்துகொள்ளுவேன். தனக்கோ எல்லா கடவுள்கள் மேலும் நம்பிக்கை உண்டு என்றும் சொன்னார். நான் பிரசங்கிக்கும் முன்னதாகவே, கோயில்குட்டியார் எனக்குச் செய்த பிரசங்கம் என்னை நொந்துபோகச் செய்தாலும், வந்த வேலையான பிரசங்கத்தை ஆவியானவரின் பெலத்தால் செய்துமுடித்து, ஆலயத்தின் இத்தகைய அவலநிலையைக் கண்டு சோகமான முகத்துடன் வீடு திரும்பினேன்.