முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

12.05

 

12.05

 

ஆகஸ்ட் 20, 2014 காலை 11.30 மணி அளவில் அலுவலகத்தில் சில பணிகளை முடித்துவிட்டு, எனது வீட்டுத் தொலைபேசிக்கான கட்டணத்தைச் செலுத்தும்படியாக சிக்காரியாவிலிருந்து டெஹ்ரி ஆன் சோன் புறப்பட்டேன். ஜெம்ஸ் வளாகத்திலிருந்து வெளியே செல்லும் முன்னர், வீட்டிற்கு வந்து தேனீர் அருந்திவிட்டு, என் மனைவி விட்டுச்சென்றிருந்த மதிய உணவினையும் எடுத்தவனாக பள்ளிக்குச் சென்று அதனை மனைவியிடம் கொடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் பயணத்தைத் தொடர்ந்தேன். தனியாக வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வது என் வழக்கம்.

அன்றோ, ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் நெகேமியாவின் தந்தை ஆகஸ்ட் 17 அன்று பீஹாரில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்ததையும், கர்த்தர் அவரை எடுத்துக்கொண்ட விதத்தைக் குறித்தும் நினைத்தவனாக வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் பிரசங்கத்தைக் கேட்ட பின்னர் கர்த்தர் தன்னை எடுத்துக்கொண்டால் நல்லது என்று விரும்பிய அவரை, அவரது விருப்பத்தின்படியே, கர்தத்ர் தன்னிடமாய்ச் சேர்த்துக்க்கொண்டார். ஆகஸ்ட் 17 ஞாயிறு அன்று ஆராதனையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் பிரசங்கத்தை முன் வரிசையில் அமர்ந்து கேட்டு, இராப்போஜனமும் பெற்று, நித்திரையடைந்த அவரது அடக்க ஆராதனையை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரே முன்நின்று நடத்தினார். எப்போதுமில்லாத வண்ணம் அது சிறப்பாக நடைபெற்றது. செவிலியர் பள்ளி மாணவிகள் அந்த ஆராதனையினை பள்ளிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து பார்த்க்கொண்டிருந்ததைக் கண்ட சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். அந்த மாணவிகளையும் அழையுங்கள், 'How we deal with death' என்பது அவர்களுக்கும் தெரியட்டும் என்று சொல்ல, அவர்களும் ஆராதனைக்கு அழைக்கப்பட்டனர். வாத்தியக் கருவியுடன், ஆராதனையுடன் அவரை பரத்திற்கு அனுப்பிவைத்த நினைவு, ஒருபுறம் மணவாளனுக்கு மணவாட்டியைக் கொண்டு கைப்பிடித்துக்கொடுத்த உணர்வை என் உள்ளத்தில் உண்டாக்கியது.

இந்நிகழ்வு என் நினைவில் நின்றதால், கர்த்தரைத் துதித்து, நன்றி சொல்லியவனாக அவசரப்படாமல் மெதுவாகவும், மிகக் கவனமாகம் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். நான் என்ன செய்கிறேன் என்பதை அறிந்திருந்ததினால் என் வாகனத்தின் வேகம் அத்தனையாய் குறைந்திருந்தது. அப்போது, மரணத்தைத் தழுவிய சில காரியங்களை தேவன் எனக்கு நினைப்பூட்டிக்கொண்டிருந்தார். நான் மனிதருக்குள் வைத்த ஆவி என்னை எப்படி வந்து சேருகின்றது என்று உனக்குத் தெரியுமா? இளைய குமாரன் தகப்பனின் ஆஸ்தி அனைத்தையும் அழித்துப்போட்டவனாக, எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தானே (லூக் 15:20), அதைப்போலவே தன்னைத் தந்த தேவனை ஆவி அடையும்போது ஆனந்தமடையும் என்று உணர்த்தினார். நம்முடைய ஆத்துமாவைச் சீர்ப்படுத்திக்கொள்ளவும், காப்பாற்றிக்கொள்ளவும் நம்மை உயிருடன் வைத்துக்கொள்ளவும் கொடுக்கப்பட்டதே தேவனால் அனுப்பப்பட்ட ஆவி. அது உள்ளே இருக்கும்போது நமது ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்ளாவிடில், அது புறப்பட்டுப் போனபின்னர் நமது ஆத்துமாவைக் காப்பாற்ற எவராலும் கூடாது என்ற சத்தியம் என் நினைவில் ஆழப்பதிந்தது. மேலும், ரயில் பெட்டியானது ரயில் எஞ்சினோடு நெருங்கி, இணைந்துவிட்டபின்னர் எஞ்சின் இருக்கும் திசையை நோக்கித்தான் அது பயணிக்கும் என்பதையும், ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை கொடுத்து ஏவாளை உருவாக்கியது போல, மரணம் என்பது மணவாளனான அவர் நம்மை மணவாட்டியாக மாற்றும் தருணமே என்பதையும் தேவன் சிந்தையில் ஞாபகமூட்டிக்கொண்டிருந்தபோது, 'ஆனந்தம் நான் பாடிடுவேனே' என்ற பாடலை பாடிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். இந்த மாதம் எண்ணமுடியா வண்ணம் நான் இப்பாடலைப் பாடியிருக்கிறேன். நிதித்துறையில் பணிபுரியும் சகோ.ஜெயக்குமார் அவர்களை ஒருநாள் காலையில் சந்திக்க நேரிட்டபோதும், இந்தப் பாடலைப் பாடிக் காட்டி, 'சந்திரனைத்தான் மனிதன் அடைந்தான், என் ஆண்டவரோ அதையும் தாண்டி பரலோகத்திற்கு அழைத்துச்செல்கிறவர்' என்று அவரிடமும் அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தேன்.

1

ஆனந்தம் நான் பாடிடுவேனே 
உள்ளம் பொங்குதே பூரிப்பாலே
ஆத்ம நாதர் தேடி வந்தார்
என்னை அழைத்துச் சென்றிடவே

2

அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - என்
நான் வாஞ்சிக்கும் நாடாம்

சந்திர சூரியனில்லை
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
தேவக் குமாரன் ஜோதியில் ஜோதி
என்றுமே வெளிச்சமாவார் அல்லேலூயா - அதியமான

டெஹ்ரி ஆன் சோன் காவல் நிலையத்திற்கு சுமர் ஐம்பது அடி தூரத்தில் நான் சென்றுகொண்டிருக்கும்போது, பரலோகத்தை நினைத்தவனாக, எனது கண்கள் கலங்கின, இரண்டு கண்களிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது; அப்போது மணி 12.05. வாகனத்தை நிறுத்திவிடுவோமா என்ற எண்ணம் எனக்குள் உண்டானது; எனினும், தொலைபேசி நிலையத்தில் கட்டணம் செலுத்தத் தாமதித்துவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் மிக மிக மெதுவாக வாகனத்தை ஓட்டிச்சென்றேன். தொடர்ந்து, 'அதிசயமான ஒளிமய நாடாம்' என்ற பாடலைப் பாடியவாறு, சுமார் 12.20 மணி அளவில் தொலைபேசி நிலையத்தைச் சென்றடைந்தேன். வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு, கட்டணத்தைச் செலுத்த உள்ளே சென்றேன். கட்டணம் செலுத்தும் இடத்தில் இருந்த நபர் எனக்குத் தெரிந்தவராயிருந்தபடியினால், 'சார், உள்ளே வாங்க' என்று என்னைக் கூப்பிட்டார். எனவே, கவுண்டரிலிருந்து இறங்கி, அந்த அறையின் பிரதான வாசல் வழியாக உள்ளே செல்ல முதல் படியில் எனது வலது காலை வைத்தேன், அதே படியில் இடது காலையும் எடுத்து வைத்தபோது, எனது காலுக்கு அருகே ஏதோ கம்பு ஒன்று நேராக நிற்பதைப் போன்று எனக்குத் தோன்ற, குனிந்து பார்த்தேன், அங்கோ, நாகப்பாம்பு படம் எடுத்தவண்ணம், உடலின் பெரும்பகுதி எழுந்தவாறு எனது இடது காலை ஒட்டி நின்றுகொண்டிருந்தது. அதன் வாய்க்கும் எனது காலுக்கும் சுமார் மூன்று அங்குலம் மட்டுமே இடைவெளி இருந்தது. அதனைக் கண்டதும், அதிர்ந்துபோனவனாக நான் மேற்படியில் வலது காலை எடுத்து வைக்கவும், அதுவோ கீழே இறங்கியது. கதவினைத் தட்டியவாறு 'பாம்பு' என்று நான் சொல்லவும், அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வந்தனர், பாம்பைப் பார்த்தனர், அது ஒரு குழிக்குள் சென்று பதுங்கியது, அதனை அடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு செய்துகொண்டிருந்தனர், அந்தக் குழிக்குள் டீசல் ஊற்றினர்; அப்போது அங்கிருந்த தொலைபேசி ஊழியர் ஒருவர், 'ஜெம்ஸ் வாலா, இஸ்லியே காட்டா நஹி' (ஜெம்ஸ் காரர், அதனால கடிக்கவில்லை) என்று சொன்னர். கட்டணத்தைக் கட்டிவிட்டு திருமபும்போது,

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூயப் பிதாவின் முகம் தரிசிப்பேன்
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைக் காத்திடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

என்ற பாடலைப் பாடிக்கொண்டே, கானானுக்கு போகும் முன், நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைப் காப்பவர் என்ற நன்றியுணர்வோடு வீடு வந்தடைந்தேன். உடலை விட்டுப் பிரிந்து அவரோடு இணைந்திருப்பதை இன்னும் அதிகமாய் புரிந்துகொள்ள இந்நிகழ்வு ஏதுவாயிருந்தது. வீட்டிற்கு வந்ததும், இதனைக் கணணியில் எழுதிப் பதிவு செய்து முடிக்கிறேன் மணியோ 2.06.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச...

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவ...

உருப்படியான புள்ள!

உருப்படியான புள்ள! தூத்துக்குடியிலுள்ள வங்கி ஒன்றில் எனது மனைவி பெயரில் கணக்கு ஒன்று தொடங்குவதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாளே வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிரப்பி, புகைப்படம் இல்லாததினால், அடுத்த நாள் காலையில் வங்கிக்குச் செல்லும் வழியில் உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்து படிவத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அடுத்த நாள் வங்கிக்குச் செல்லும் வழியில் ஏதாவது ஸ்டூடியோ இருக்கிறதா என தேடிக்கொண்டே சென்றேன்; அப்பொழுது "JPN Studio உடனடி போட்டோ பிரின்ட் கிடைக்கும்" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதன் உள்ளே நுழைந்தேன், பெரியவர்கள் ஒரு சிறிய பையன் உட்கார்ந்திருந்தான், அருகே இரண்டு அமர்ந்திருந்தனர். நான் அச்சிறுவனிடம், "போட்டோ எடுக்கனும், உடனே பிரின்ட் வேணும் கிடைக்குமா" என கேட்டேன். அவன் "ஓ கிடைக்குமே" என பதிலுரைத்தான். நான் யார் எடுப்பார்கள்? என கேட்டதற்கு "நான்தான்” அவன் பதில் சொன்னபோது, சற்று வியந்துபோனேன். அப்படியே அவன் என அமர்ந்திருந்த இருக்கையின் உள்ளே எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு கம்ப்யூட்டர் அர...