12.05
ஆகஸ்ட் 20, 2014 காலை 11.30 மணி அளவில் அலுவலகத்தில் சில பணிகளை முடித்துவிட்டு, எனது வீட்டுத் தொலைபேசிக்கான கட்டணத்தைச் செலுத்தும்படியாக சிக்காரியாவிலிருந்து டெஹ்ரி ஆன் சோன் புறப்பட்டேன். ஜெம்ஸ் வளாகத்திலிருந்து வெளியே செல்லும் முன்னர், வீட்டிற்கு வந்து தேனீர் அருந்திவிட்டு, என் மனைவி விட்டுச்சென்றிருந்த மதிய உணவினையும் எடுத்தவனாக பள்ளிக்குச் சென்று அதனை மனைவியிடம் கொடுத்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் பயணத்தைத் தொடர்ந்தேன். தனியாக வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வது என் வழக்கம்.
அன்றோ, ஜெம்ஸ் மிஷனரி சகோதரர் நெகேமியாவின் தந்தை ஆகஸ்ட் 17 அன்று பீஹாரில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்ததையும், கர்த்தர் அவரை எடுத்துக்கொண்ட விதத்தைக் குறித்தும் நினைத்தவனாக வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் பிரசங்கத்தைக் கேட்ட பின்னர் கர்த்தர் தன்னை எடுத்துக்கொண்டால் நல்லது என்று விரும்பிய அவரை, அவரது விருப்பத்தின்படியே, கர்தத்ர் தன்னிடமாய்ச் சேர்த்துக்க்கொண்டார். ஆகஸ்ட் 17 ஞாயிறு அன்று ஆராதனையில் சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரின் பிரசங்கத்தை முன் வரிசையில் அமர்ந்து கேட்டு, இராப்போஜனமும் பெற்று, நித்திரையடைந்த அவரது அடக்க ஆராதனையை சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமாரே முன்நின்று நடத்தினார். எப்போதுமில்லாத வண்ணம் அது சிறப்பாக நடைபெற்றது. செவிலியர் பள்ளி மாணவிகள் அந்த ஆராதனையினை பள்ளிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து பார்த்க்கொண்டிருந்ததைக் கண்ட சகோதரர் அகஸ்டின் ஜெபக்குமார். அந்த மாணவிகளையும் அழையுங்கள், 'How we deal with death' என்பது அவர்களுக்கும் தெரியட்டும் என்று சொல்ல, அவர்களும் ஆராதனைக்கு அழைக்கப்பட்டனர். வாத்தியக் கருவியுடன், ஆராதனையுடன் அவரை பரத்திற்கு அனுப்பிவைத்த நினைவு, ஒருபுறம் மணவாளனுக்கு மணவாட்டியைக் கொண்டு கைப்பிடித்துக்கொடுத்த உணர்வை என் உள்ளத்தில் உண்டாக்கியது.
இந்நிகழ்வு என் நினைவில் நின்றதால், கர்த்தரைத் துதித்து, நன்றி சொல்லியவனாக அவசரப்படாமல் மெதுவாகவும், மிகக் கவனமாகம் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தேன். நான் என்ன செய்கிறேன் என்பதை அறிந்திருந்ததினால் என் வாகனத்தின் வேகம் அத்தனையாய் குறைந்திருந்தது. அப்போது, மரணத்தைத் தழுவிய சில காரியங்களை தேவன் எனக்கு நினைப்பூட்டிக்கொண்டிருந்தார். நான் மனிதருக்குள் வைத்த ஆவி என்னை எப்படி வந்து சேருகின்றது என்று உனக்குத் தெரியுமா? இளைய குமாரன் தகப்பனின் ஆஸ்தி அனைத்தையும் அழித்துப்போட்டவனாக, எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தானே (லூக் 15:20), அதைப்போலவே தன்னைத் தந்த தேவனை ஆவி அடையும்போது ஆனந்தமடையும் என்று உணர்த்தினார். நம்முடைய ஆத்துமாவைச் சீர்ப்படுத்திக்கொள்ளவும், காப்பாற்றிக்கொள்ளவும் நம்மை உயிருடன் வைத்துக்கொள்ளவும் கொடுக்கப்பட்டதே தேவனால் அனுப்பப்பட்ட ஆவி. அது உள்ளே இருக்கும்போது நமது ஆத்துமாவைக் காப்பாற்றிக்கொள்ளாவிடில், அது புறப்பட்டுப் போனபின்னர் நமது ஆத்துமாவைக் காப்பாற்ற எவராலும் கூடாது என்ற சத்தியம் என் நினைவில் ஆழப்பதிந்தது. மேலும், ரயில் பெட்டியானது ரயில் எஞ்சினோடு நெருங்கி, இணைந்துவிட்டபின்னர் எஞ்சின் இருக்கும் திசையை நோக்கித்தான் அது பயணிக்கும் என்பதையும், ஆதாமுக்கு அயர்ந்த நித்திரை கொடுத்து ஏவாளை உருவாக்கியது போல, மரணம் என்பது மணவாளனான அவர் நம்மை மணவாட்டியாக மாற்றும் தருணமே என்பதையும் தேவன் சிந்தையில் ஞாபகமூட்டிக்கொண்டிருந்தபோது, 'ஆனந்தம் நான் பாடிடுவேனே' என்ற பாடலை பாடிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். இந்த மாதம் எண்ணமுடியா வண்ணம் நான் இப்பாடலைப் பாடியிருக்கிறேன். நிதித்துறையில் பணிபுரியும் சகோ.ஜெயக்குமார் அவர்களை ஒருநாள் காலையில் சந்திக்க நேரிட்டபோதும், இந்தப் பாடலைப் பாடிக் காட்டி, 'சந்திரனைத்தான் மனிதன் அடைந்தான், என் ஆண்டவரோ அதையும் தாண்டி பரலோகத்திற்கு அழைத்துச்செல்கிறவர்' என்று அவரிடமும் அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தேன்.
1
ஆனந்தம் நான் பாடிடுவேனே
உள்ளம் பொங்குதே பூரிப்பாலே
ஆத்ம நாதர் தேடி வந்தார்
என்னை அழைத்துச் சென்றிடவே
2
அதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - என்
நான் வாஞ்சிக்கும் நாடாம்
சந்திர சூரியனில்லை
ஆனால் இருள் ஏதும் காணவில்லை
தேவக் குமாரன் ஜோதியில் ஜோதி
என்றுமே வெளிச்சமாவார் அல்லேலூயா - அதியமான
டெஹ்ரி ஆன் சோன் காவல் நிலையத்திற்கு சுமர் ஐம்பது அடி தூரத்தில் நான் சென்றுகொண்டிருக்கும்போது, பரலோகத்தை நினைத்தவனாக, எனது கண்கள் கலங்கின, இரண்டு கண்களிலும் கண்ணீர் வழியத் தொடங்கியது; அப்போது மணி 12.05. வாகனத்தை நிறுத்திவிடுவோமா என்ற எண்ணம் எனக்குள் உண்டானது; எனினும், தொலைபேசி நிலையத்தில் கட்டணம் செலுத்தத் தாமதித்துவிடக்கூடாது என்ற எண்ணத்துடன் மிக மிக மெதுவாக வாகனத்தை ஓட்டிச்சென்றேன். தொடர்ந்து, 'அதிசயமான ஒளிமய நாடாம்' என்ற பாடலைப் பாடியவாறு, சுமார் 12.20 மணி அளவில் தொலைபேசி நிலையத்தைச் சென்றடைந்தேன். வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு, கட்டணத்தைச் செலுத்த உள்ளே சென்றேன். கட்டணம் செலுத்தும் இடத்தில் இருந்த நபர் எனக்குத் தெரிந்தவராயிருந்தபடியினால், 'சார், உள்ளே வாங்க' என்று என்னைக் கூப்பிட்டார். எனவே, கவுண்டரிலிருந்து இறங்கி, அந்த அறையின் பிரதான வாசல் வழியாக உள்ளே செல்ல முதல் படியில் எனது வலது காலை வைத்தேன், அதே படியில் இடது காலையும் எடுத்து வைத்தபோது, எனது காலுக்கு அருகே ஏதோ கம்பு ஒன்று நேராக நிற்பதைப் போன்று எனக்குத் தோன்ற, குனிந்து பார்த்தேன், அங்கோ, நாகப்பாம்பு படம் எடுத்தவண்ணம், உடலின் பெரும்பகுதி எழுந்தவாறு எனது இடது காலை ஒட்டி நின்றுகொண்டிருந்தது. அதன் வாய்க்கும் எனது காலுக்கும் சுமார் மூன்று அங்குலம் மட்டுமே இடைவெளி இருந்தது. அதனைக் கண்டதும், அதிர்ந்துபோனவனாக நான் மேற்படியில் வலது காலை எடுத்து வைக்கவும், அதுவோ கீழே இறங்கியது. கதவினைத் தட்டியவாறு 'பாம்பு' என்று நான் சொல்லவும், அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வந்தனர், பாம்பைப் பார்த்தனர், அது ஒரு குழிக்குள் சென்று பதுங்கியது, அதனை அடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு செய்துகொண்டிருந்தனர், அந்தக் குழிக்குள் டீசல் ஊற்றினர்; அப்போது அங்கிருந்த தொலைபேசி ஊழியர் ஒருவர், 'ஜெம்ஸ் வாலா, இஸ்லியே காட்டா நஹி' (ஜெம்ஸ் காரர், அதனால கடிக்கவில்லை) என்று சொன்னர். கட்டணத்தைக் கட்டிவிட்டு திருமபும்போது,
ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூயப் பிதாவின் முகம் தரிசிப்பேன்
நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைக் காத்திடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்
என்ற பாடலைப் பாடிக்கொண்டே, கானானுக்கு போகும் முன், நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைப் காப்பவர் என்ற நன்றியுணர்வோடு வீடு வந்தடைந்தேன். உடலை விட்டுப் பிரிந்து அவரோடு இணைந்திருப்பதை இன்னும் அதிகமாய் புரிந்துகொள்ள இந்நிகழ்வு ஏதுவாயிருந்தது. வீட்டிற்கு வந்ததும், இதனைக் கணணியில் எழுதிப் பதிவு செய்து முடிக்கிறேன் மணியோ 2.06.
Comments
Post a Comment