Skip to main content

தவறியதால் தவறிய வேதம்


 


ஜுலை 19, ஞாயிறு மாலை 3.50 மணி, செபத்தையாபுரம் நோவாவின் பேழை ஆலய ஆராதனையில் செய்தியளிப்பதற்காக வேதாகமத்தைக் கையில் எடுத்தவனாக வீட்டை விட்டு வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் அமர்ந்து புறப்பட ஆயத்தமானேன். இருசக்கர வாகனத்தில் பின்புறம் பெட்டியோ அல்லது முன்புறம் பெட்ரோல் டங்கியின் மீது பொருட்களை வைக்க பைகளோ இல்லாததினால், வேதத்தை எங்கே வைப்பது என்று யோசித்தவனாக, மனைவியை அழைத்தேன், வேதத்தைக் கொண்டுசெல்ல ஏதாவது பை இருக்கிறதா? என்று கேட்டேன்; மனைவியோ ஒரு மஞ்சள் நிற துணிக்கடைப் பையினைக் கொண்டுவந்தாள். வேதத்தை அதில் கொண்டுசெல்வதை விரும்பாத நான்; இந்தப் பை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மடியில் வேதத்தை வைத்துக்கொண்டு வாகனத்தில் புறப்பட்டேன்; ஆலயத்தில் செய்தியளித்துவிட்டு, 7 மணிக்கு செந்தியம்பலத்தில் நடைபெறவிருந்த நண்பர்கள் ஜெப ஐக்கிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக விரைந்து வந்துகொண்டிருந்தேன். செந்தியம்பலத்தின் உள்ளே நுழையும் வழியில் காணப்பட்ட இரண்டு வேகத்தடைகளில் வாகனத்தை ஏற்றி இறக்க மனமற்றவனாக, வேகத்தடைக்கு வலப்புறமாயிருந்த ஓற்றையடி வழியில் வாகனத்தைச் செலுத்தினேன், அருகில் இருந்த வளைவிலும் வலப்புறமாகவே முன்னேற நான் முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக சரியான வழியில் எதிர்த்துவந்த மற்றொரு வாகனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினேன். காலை கீழே ஊன்றினால் மடியிலிருக்கும் வேதம் கீழே விழுந்துவிடும் என்ற பதற்றம்; காலை கீழே வைக்காமல் எப்படியாகிலும் வாகனத்தைத் தட்டுத் தடுமாறி திருப்பிவிட முயற்சித்தும் எனது முயற்சி பலிக்கவில்லை. எதிர் வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காலை கீழே ஊன்றும் நிலை உண்டானது; வேதமோ மடியிலிருந்து கீழே சரிந்தது.

மண்ணில் கிடந்த வேதத்தைக் கண்ணால் பார்த்தபோது, என் மனம் உடைந்தது. சற்று முன்னே சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு, வேதத்தை எடுத்துக்கொள்ள நான் இறங்கும் அந்நொடிப்பொழுதிற்குள், அவ்வழியே வந்த நெற்றியில் திருநீர் பூசியிருந்த ஓர் நடுத்தர வயதுள்ள சகோதரி என்னருகே வந்து நீன்றார்; 'வேதம் கீழே கிடக்கிறது' என்று சொன்னவராக, ஓடிச் சென்று வேதாகமத்தை எடுத்துக்கொண்டுவந்து என் கைகளில் கொடுத்தார்; 'நீங்க மூன்றாம் வகுப்பு டீச்சர் மகன்தானே' என்று கேட்டார்; 'ஆம்' என்றேன். ஆம், என் தாய் மூன்றாம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றிய அந்தப் பள்ளிக்கு முன்னேதான் என் வேதமும் கீழே கிடந்தது. வலதுபுறம் திரும்பிப் பார்த்தேன்; சற்று தொலைவில் சில வாலிபர்கள் அமர்ந்திருந்தனர்; நேராகப் பார்த்தேன் சில முதியவர்கள் நின்றுகொண்டிருந்தனர்; 'தவறு என் மேலேதான்' என்று சொன்னவனாக வாகனத்தைக் கிளப்பினேன். ஆம், வேகத்தடையில் முறைப்படி வந்திருந்தால், இது அத்தனையையும் நான் தவிர்த்திருக்கலாமே! நான் தவறிச் சென்றதால் வேதம் தவறி விழுந்தது. கிறிஸ்தவனாகிய எனக்கு ஓர் நல்ல பாடமும் கிடைத்தது. கிறிஸ்தவன் என்று சொல்லிவிட்டு, தவறான வழியில் செல்லும்போது, வேதத்தை நாம் தவறவிட்டுவிடுகின்றோம்; 'நீ இந்த வேதத்தின்படி நடக்கவேண்டியவனல்லவா?' என்று மற்றவர்கள் வேதத்தை நமது கையில் எடுத்துக் கொடுக்கும் நிலைக்கு நமது வாழ்க்கையினைத் தள்ளிவிடுகின்றோம்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்; 'இன்றைக்கு ஜெபக்குழு கூடுகை இல்லை' என்று சகோதரன் ஒருவன் வந்து சொன்னதாக என் மனைவி என்னிடம் தெரிவித்தாள். எதற்காக ஆசைப்பட்டு, அவசரப்பட்டு வந்தேனோ; அதையும் இழந்தவனாக, கிராமத்தை விட்டு, மனைவி மற்றும் மகளுடன் தூத்துக்குடிக்குப் பயணமானேன். அந்த வழியைக் கடக்கும்போது, எனது கண்ணோ வேதம் விழுந்துகிடந்த அந்த மண்ணை வேதனையுடன் எட்டிப்பார்த்தது. 

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே