ஜுலை 19, ஞாயிறு மாலை 3.50 மணி, செபத்தையாபுரம் நோவாவின் பேழை ஆலய ஆராதனையில் செய்தியளிப்பதற்காக வேதாகமத்தைக் கையில் எடுத்தவனாக வீட்டை விட்டு வெளியே வந்து இருசக்கர வாகனத்தில் அமர்ந்து புறப்பட ஆயத்தமானேன். இருசக்கர வாகனத்தில் பின்புறம் பெட்டியோ அல்லது முன்புறம் பெட்ரோல் டங்கியின் மீது பொருட்களை வைக்க பைகளோ இல்லாததினால், வேதத்தை எங்கே வைப்பது என்று யோசித்தவனாக, மனைவியை அழைத்தேன், வேதத்தைக் கொண்டுசெல்ல ஏதாவது பை இருக்கிறதா? என்று கேட்டேன்; மனைவியோ ஒரு மஞ்சள் நிற துணிக்கடைப் பையினைக் கொண்டுவந்தாள். வேதத்தை அதில் கொண்டுசெல்வதை விரும்பாத நான்; இந்தப் பை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, மடியில் வேதத்தை வைத்துக்கொண்டு வாகனத்தில் புறப்பட்டேன்; ஆலயத்தில் செய்தியளித்துவிட்டு, 7 மணிக்கு செந்தியம்பலத்தில் நடைபெறவிருந்த நண்பர்கள் ஜெப ஐக்கிய கூட்டத்தில் பங்கேற்பதற்காக விரைந்து வந்துகொண்டிருந்தேன். செந்தியம்பலத்தின் உள்ளே நுழையும் வழியில் காணப்பட்ட இரண்டு வேகத்தடைகளில் வாகனத்தை ஏற்றி இறக்க மனமற்றவனாக, வேகத்தடைக்கு வலப்புறமாயிருந்த ஓற்றையடி வழியில் வாகனத்தைச் செலுத்தினேன், அருகில் இருந்த வளைவிலும் வலப்புறமாகவே முன்னேற நான் முயற்சித்தபோது, எதிர்பாராதவிதமாக சரியான வழியில் எதிர்த்துவந்த மற்றொரு வாகனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினேன். காலை கீழே ஊன்றினால் மடியிலிருக்கும் வேதம் கீழே விழுந்துவிடும் என்ற பதற்றம்; காலை கீழே வைக்காமல் எப்படியாகிலும் வாகனத்தைத் தட்டுத் தடுமாறி திருப்பிவிட முயற்சித்தும் எனது முயற்சி பலிக்கவில்லை. எதிர் வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காலை கீழே ஊன்றும் நிலை உண்டானது; வேதமோ மடியிலிருந்து கீழே சரிந்தது.
மண்ணில் கிடந்த வேதத்தைக் கண்ணால் பார்த்தபோது, என் மனம் உடைந்தது. சற்று முன்னே சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு, வேதத்தை எடுத்துக்கொள்ள நான் இறங்கும் அந்நொடிப்பொழுதிற்குள், அவ்வழியே வந்த நெற்றியில் திருநீர் பூசியிருந்த ஓர் நடுத்தர வயதுள்ள சகோதரி என்னருகே வந்து நீன்றார்; 'வேதம் கீழே கிடக்கிறது' என்று சொன்னவராக, ஓடிச் சென்று வேதாகமத்தை எடுத்துக்கொண்டுவந்து என் கைகளில் கொடுத்தார்; 'நீங்க மூன்றாம் வகுப்பு டீச்சர் மகன்தானே' என்று கேட்டார்; 'ஆம்' என்றேன். ஆம், என் தாய் மூன்றாம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றிய அந்தப் பள்ளிக்கு முன்னேதான் என் வேதமும் கீழே கிடந்தது. வலதுபுறம் திரும்பிப் பார்த்தேன்; சற்று தொலைவில் சில வாலிபர்கள் அமர்ந்திருந்தனர்; நேராகப் பார்த்தேன் சில முதியவர்கள் நின்றுகொண்டிருந்தனர்; 'தவறு என் மேலேதான்' என்று சொன்னவனாக வாகனத்தைக் கிளப்பினேன். ஆம், வேகத்தடையில் முறைப்படி வந்திருந்தால், இது அத்தனையையும் நான் தவிர்த்திருக்கலாமே! நான் தவறிச் சென்றதால் வேதம் தவறி விழுந்தது. கிறிஸ்தவனாகிய எனக்கு ஓர் நல்ல பாடமும் கிடைத்தது. கிறிஸ்தவன் என்று சொல்லிவிட்டு, தவறான வழியில் செல்லும்போது, வேதத்தை நாம் தவறவிட்டுவிடுகின்றோம்; 'நீ இந்த வேதத்தின்படி நடக்கவேண்டியவனல்லவா?' என்று மற்றவர்கள் வேதத்தை நமது கையில் எடுத்துக் கொடுக்கும் நிலைக்கு நமது வாழ்க்கையினைத் தள்ளிவிடுகின்றோம்.
வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்; 'இன்றைக்கு ஜெபக்குழு கூடுகை இல்லை' என்று சகோதரன் ஒருவன் வந்து சொன்னதாக என் மனைவி என்னிடம் தெரிவித்தாள். எதற்காக ஆசைப்பட்டு, அவசரப்பட்டு வந்தேனோ; அதையும் இழந்தவனாக, கிராமத்தை விட்டு, மனைவி மற்றும் மகளுடன் தூத்துக்குடிக்குப் பயணமானேன். அந்த வழியைக் கடக்கும்போது, எனது கண்ணோ வேதம் விழுந்துகிடந்த அந்த மண்ணை வேதனையுடன் எட்டிப்பார்த்தது.
Comments
Post a Comment