மே 8, 2019 இருதய பரிசோதனைக்காக சென்னையில் உள்ள MMM (Madras Medical Mission) மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். மருத்துவரது அறிவுரையின்படி, உள்நோயாளிப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த எனக்கு, Angiogram எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளை செய்துகொண்டிருந்தனர் செவிலியர்கள். அப்பொழுது, எனது படுக்கையை நோக்கி வந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், உங்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சில ஆயத்தப் பணிகளைச் செய்யவேண்டும் என்றவாறு, wheel chair -ல் அமரச் செய்து அழைத்துச்சென்றார்.
உள்ளே யாருமே இல்லாத சிறியதோர் அறை; ஆங்காங்கே, சிதறிய நிலையில் சில துணிகள், சில மருத்துவ உபகரணங்கள்; அங்கிருந்த படுக்கையில் என்னைப் படுக்கவைத்தார் அந்த ஊழியர். இங்கே என்னைக் கொண்டுவந்து என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி என்னில் எழ, 'ஆடைகளைக் கழற்றுங்கள்' என்று அமைதியாகச் சொன்னார் அவர். நானோ, மேலாடையை மட்டும் கழற்றிவிட்டு, படுக்கையில் அமர்ந்திருந்தேன்; அவரோ, மீண்டும் என்னை நோக்கி, 'உங்கள் உடலில் உள்ள அத்தனை ஆடைகளையும் கழற்றுங்கள்' என்றார். ஒருபுறம் வெட்கம் என்னை வாட்டியெடுத்தாலும், அவருக்கு முன் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மருத்துவத்திற்கென்று வந்தபின் மறுப்பதும் இயலாதது என்ற மனநிலையில், அத்தனை ஆடைகளையும் கழற்றினேன். 'இரட்சிப்பின் வஸ்திரமில்லாதவர்களை பரலோகம் இப்படித்தான் பார்க்குமோ?' என்பதை அப்போது நினைவுகூர்ந்தேன்.
நிர்வாணமாக என்னைப் படுக்கவைத்து, கழுத்துக்குக் கீழே உடலில் இருந்த உரோமங்கள் அனைத்தையும் நீக்கத் தொடங்கினார் அந்த ஊழியர். பணியினைச் செய்துகொண்டே, என்னை யார்? என்றும், எங்கிருந்து வருகிறேன்? என்றும் அன்போடு விசாரித்த அவரோடு நானும் உரையாடத் தொடங்கினபோது, தனது உள்ளத்தை என்னிடத்தில் வெளிப்படுத்தி, தனது குடும்ப நிலையினை என்னோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார் அவர். சென்னையில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்றும், உடன்பிறந்த சகோதரி திருமணமாகும் வரை, நீண்டநாட்களாக தன்னுடைய திருமணத்திற்குக் காத்திருக்க நேரிட்டது என்றும், திருமணமாகி பல வருடங்களானபின்பும் இன்னும் குழந்தைபேறு அற்ற நிலையில் தான் வாழுவதையும் அவர் கூறக் கேட்டு உள்ளம் உடைந்தேன். அவர் கிறிஸ்துவை அறியாத மனிதர் என்பதையும், போராட்டங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதையும் அறிந்துகொண்ட நான், மேலும் அவரை விசாரித்து, கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் அறிவித்தேன். அவர் தனது பணியை முடித்தபோது, நானும் எனது பணியினை முடித்த திருப்தி எனக்கு உண்டானது. அவரது ஆத்துமாவினை நான் விசாரித்தபோது, எனது வியாதியைக்குறித்து எனக்கிருந்த மனவேதனையை அது குறைத்தது. ஆம், பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையின் நிலை எத்தகைய சூழ்நிலையில் காணப்பட்டாலும், பிறரைக் குறித்த கவலையும், கரிசனையும் நம்மில் மிகுந்து காணப்படுமென்றால், அவர்களை விசாரிக்கவேண்டும் என்ற வேட்கை தானாகவே நமது இதயத்தில் பொங்கி எழும். நம்மைச் சந்திப்பவர்களை நாம் விசாரிக்க விசாரிக்க நம்முடைய வியாதியைக் குறித்த வேதனைக்கு அது மருந்தாகிவிடும்.
ஓர் போதகரின் மனைவியை அறிவேன். முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக பல வருடங்களாக படுக்கையிலேய தனது வாழ்நாளைக் கழித்துவந்தவர் அவர். அவர்களுடைய சபைக்கு நான் சென்று பிரசங்கிக்கும்போதெல்லாம், ஆராதனை முடிந்ததும், ஆலயத்திற்குப் பின்னே உள்ள அறையில் படுக்கையில் இருந்த போதகரின் மனைவியைச் சென்று சந்தித்து ஜெபித்துவருவது வழக்கம். அவ்வாறு ஜெபிக்கும்போது, ஒவ்வொரு முறையும், 'ஜனங்கள் உங்களையும் உங்கள் வியாதியையும் விசாரிக்கும் முன், நீங்கள் ஜனங்களை விசாரித்துவிடுங்கள்' என்ற ஆலோசனையை தவறாமல் கூறிவிட்டு வருவேன். ஒருமுறை அந்த ஆலயத்தில் நான் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, சகோதரிகளின் பக்கத்தில் போதகரின் மனைவியைப் போன்ற தோற்றமுடைய ஒரு சகோதரி அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்; என்னால் நம்ப இயலவில்லை, யோவானது தகப்பனான சகரியாவைப் போல, ஜெபித்தும் விசுவாசமற்ற நிலையில்தான் நானும் காணப்பட்டேன். பிரசங்கித்து முடிக்கும் வரை சந்தேகம் எனது சிந்தையை நிறைத்திருந்தது. ஆராதனை முடிந்ததும், என்னை நோக்கி அந்த சகோதரி நடந்துவந்தபோது, ஒருவேளை போதகருடைய மனைவியின் சகோதரியோ! என்றே நினைத்தேன். ஆனால், போதகரின் அருகே வந்து நின்றதும், போதகரின் மனைவி என்பதை அறிந்துகொண்ட நான் ஆண்டவரை மகிமைப்படுத்தினேன். வியாதிப்படுக்கையின்போது கூறிய ஆலோசனையினை நினைவுகூர்ந்தேன். மற்றவர்களது ஆத்துமாவை விசாரித்தால், அது நம்முடைய சரீரத்துக்கே மருந்தாகிவிடும் என்பது நிச்சம்.
Comments
Post a Comment