Skip to main content

பாதை மாறிய பேருந்து

 





பாதை மாறிய பேருந்து


 பேருந்து நிலையத்தில் அமைதியாய் நின்றுகொண்டிருந்த பேருந்துகளிடையே, புறப்படுவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது ஓர் பேருந்து. பயணிகளைச் சேர்ப்பதற்காக ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஹார்ன் அடித்துக்கொண்டிருந்தார், நடத்துநரோ, 'சென்னை, சென்னை' வாங்கம்மா, வாங்கய்யா சீக்கிரம் வாங்க வண்டி கிளம்ப நேரம் ஆச்சி என்று சுற்றி நிற்கும் பயணிகளை சுண்டி இழுத்துக்கொண்டிருந்தார். காலியாகக் கிடந்த இருக்கைகள் அனைத்தும் நிரம்பியபோதிலும் வழியில் இருக்கும் சின்னச் சின்ன ஊர்களுக்கெல்லாம் ஆட்களை ஏற்றத் தொடங்கினார். பேருந்து நிலையத்தினுள்ளேயே பேருந்து மெல்ல ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. எஞ்சியிருந்த இடமெல்லாம் பயணிகளை அடைத்துக்கொண்டபடி பேருந்து புறப்பட்டது பேருந்து. அப்பாடா! என்று மூச்சு வாங்கிக் கொண்டனர் பயணிகள். டிக்கெட், டிக்கெட் என்று பேருந்தின் முன்பக்கத்திலிருந்து பின்பக்கம் வரை பயணிகள் ஊடே நுழைந்து வந்துகொண்டிருந்தார் நடத்துநர். டிக்கெட் எடுத்ததும் இனி நமக்கென்ன வேலை, ஓட்டுநருக்குத்தானே என்றவாறு தலைசாய்த்து தூக்கத்தைத் தேடிக்கொண்டிருந்தனர் சில பயணிகள். சிலரோ வைத்த கண் வாங்காமல் பேருந்து போகும் வழியெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மாலை மயங்கியது, இரவு தொடங்கியது,

பேருந்தில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளை அனைத்துவிட்டு, மின்னிக்கொண்டிருக்கும் இரவு விளக்கினை மாத்திரம் எரியவிட்டார் நடத்துநர். தூக்கத்தைத் தேடிக்கொண்டிருந்த பயணிகளுக்கு அது சாதகமான சந்தர்ப்பம். இரவு சுமார் 8 மணி, நீண்ட தூரம் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர், ஓரிடத்தில் வண்டியை நிறுத்த, அவ்வூரில் ஏறிய மற்றொரு ஓட்டுநர் பேருந்தை ஓட்டத் தொடங்கினார். அடுத்தவர் ஏறிவிட்டதால் அயர்ந்து தூங்கினார் முதலாம் ஓட்டுநர். இரவு சுமார் 12 மணி, 'நிறுத்துங்க, நிறுத்துங்க' என்று கூச்சலிட்டவாறு இருக்கையிலிருந்து எழுந்தார் ஒரு பயணி. சுற்றும் முற்றும் இருட்டு, அவரது கூச்சலில் தூ க்கத்திலிருந்து எழுந்த சில பயணிகள், அந்த மனிதரை கோபத்துடன் திட்டித் தீர்த்தனர், மற்ற ஆளுக தூங்குறது கண்ணுக்குத் தெரியலயா, ஜீவனே போன மாதிரி இந்தக் கத்து கத்துறயேயா என்றார் ஓர் பயணி. அந்த மனிதரோ யாருடைய கோபத்தையும் பொருட்படுத்தாதவாறு, பேருந்தை நிறுத்தி இறங்கிச் சென்றார். அப்பாடா! நல்ல வேளடா இறங்கித் தொலைச்சான் என்றவாறு பிற பயணிகள் தூக்கத்தைத் தொடர்ந்தனர். அதிகாலை, சுமார் 1 மணி, பின் இருக்கையில் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த ஓர் பெண், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், ஓட்டுநரை நோக்கி மெல்ல நடந்து சென்று, தன்னை இறக்கிவிடும்படி கேட்டுக்கொள்ள, 'இந்த இருட்டுல இந்த ஊர்ல இறங்காதம்மா, கையில குழந்தைய வேற வச்சிருக்க' என்று ஓட்டுநர் ஆலோசனை சொல்ல, அதையெல்லாம் தட்டிவிட்டவளாக     தைரியமாக     பேருந்தை விட்டு இறங்கிச் சென்றாள். பேருந்தின் பயணம் தொடர்ந்தது. சுமார் அரை மணி நேரத்திற்குள், இருவர்  ஒருவரையொருவர்      நடத்துநரை அடிக்கத் தொடங்க, பேருந்து ஓரிடத்தில் நின்றது. அவர்களது வழக்கினைத் தீர்த்துவைக்க இயலாமற்போன பிற பயணிகள், நன்றாக குடித்திருந்த அவ்விருவரையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

அதிகாலை வெளுத்தது, சூரியன் தன்னை வெளிப்படுத்தாமல், வெளிச்சத்தை மட்டும் வீசிக்கொண்டிருந்தது. நடத்துநரிடம் வாக்கு வாதம் செய்து காசு கேட்டுக்கொண்டிருந்தார் ஓர் பயணி. ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தார். அங்கும் இங்கும் பார்த்த நடத்துநர், அவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு அவரை இறக்கிவிட்டார், மீதி சில்லறை வாங்குகிறார் என நினைத்தனர் பிற பயணிகள். பேருந்தின் முன் இருக்கையில் இருந்த சிலர், பேருந்து எங்கே போகிறது என எட்டிப் பார்க்க,  சென்னையை நோக்கிச் செல்லவேண்டிய பேருந்து, கோயமுத்தூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இரவில் ஒருவன் எழுந்து கூச்சலிட்டு இறங்கிச் சென்றதும், இடையில் ஒரு பெண் இடுப்பில் குழந்தையைச் சுமந்தவாறு இறங்கிச் சென்றதும் ஏன்? குடித்த இருவர் சண்டையிட்டுச் சென்றதும், ஓட்டுநரிடம் ஒருவர் பணம் வாங்கிச் சென்றதும் எதற்காக என்ற காரணம் பயணிகளுக்குப் புரிந்தது. குடித்திருந்த இருவர்கள் கூட தப்பித்துக்கொண்டனரே, ஓட்டுநரின் கூடவே இருந்துவிட்ட நாமோ மாட்டிக்கொண்டோமே என்ற பீதியுடன் அனைவரும் எழுந்து வண்டியை நிறுத்தும்படிச் சொல்ல, வண்டியோ கோயமுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்திருந்தது. கோயமுத்தூர் போகிற பேருந்தின் மாற்று ஓட்டுநராக அந்த ஊரில் காத்துக்கொண்டிருந்தவர், சென்னைக்குப் போய்க்கொண்டிருந்த பேருந்தின் மாற்று ஓட்டுநராக தவறுதலாக ஏறிவிட்டது அப்போது தெரியவந்தது. ஓட்டுநர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க, நடத்துநரோ செய்வதறியாது விழிக்க, பயணிகள் அனைவரும் பரிதாபமாய் இறங்கி நின்றனர். இக்கதை இன்றைய பேருந்தாகிய ஊழியங்களுக்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களாகிய ஊழியர்களுக்கும் பொருந்தக் கூடியதே.

மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள், அவன் உங்கள் மார்க்கத்தானான போது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். (மத் 23:15)


Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே