இரண்டு தோல்விகள்
டிசம்பர் 4, 2016, W.M.E சபையின் ஞாயிறு காலை 7 மணி ஆராதனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. வாரத்தின் முதல் ஞாயிறு என்பதால், திருவிருந்து ஆராதனையும் நடைபெறவிருந்தது. ஆராதனையின் முதற்பகுதி முடிவடைந்து, திருவிருந்து ஆராதனை ஆரம்பமானது. சபையார் ஜெபத்துடன் முழங்காலில் நிற்க, போதகர் மற்றும் உடன் ஊழியர்கள் அப்பத்தையும் ரசத்தையும் கையில் ஏந்தியவண்ணம் வந்து ஜனங்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தனர். ஆலயத்தின் கடைசி வரிசையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன் நான். அப்பத்தை கொடுக்கும்படியாக போதகர் என்னருகே வந்தபோது, திருவிருந்து ஆராதனையின் இறுதி ஜெபத்தினை ஏறெடுக்கும்படி என்னிடத்தில் கேட்டுக்கொண்டார். திருவிருந்து பரிமாறி முடிந்ததும், இறுதி ஜெபத்தை ஏறெடுக்கும்படியாக முன்னே சென்ற நான், திருவிருந்தைப் பற்றியதோர் முகவுரையினை, வசனத்தின் அடிப்படையில் ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கூறினேன்.
'மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்' (ஆதி 9:4) என்று இஸ்ரவேல் மக்களுக்கு ஆண்டவர் கட்டளையிட்டிருந்ததையும், அதைத்தொடர்ந்ததாகவும், அதற்கு ஒப்புடையதாகவுமே, 'வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்' (யாத் 23:19) என்று கட்டளையிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி, புதிய ஏற்பாட்டு நாட்களில் இயேசு கிறிஸ்துவோ, 'என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்' (யோவா 6:54) என்று சொன்னதையும் எடுத்துக்கூறி. ஒன்றாய் சேர்க்கவேண்டாம் என்று கூறப்பட்டிருந்த மாம்சத்தையும் இரத்தத்தையும், நம்முடைய சரீரத்திலே ஒன்றாகச் சேர்க்கும் நேரமே திருவிருந்தின் ரகசியம் என்றும், உலகத்தின் ரட்சிப்பிற்காக அவரது சரீரமும், இரத்தமும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது; கடைசிச் சொட்டு இரத்தம் கூட மாம்சத்தினுடன் விட்டுவைக்கப்படவில்லை. அணுப்பிளவைப்போல (FISSION) நடைபெற்ற இயேசுவின் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்ச்சியினால் உண்டான சக்தியே மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டெடுக்கிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தமே சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறது
(1யோவா 1:7). இயேசுவின் இரத்தமும் சரீரமும் பிரிக்கப்பட்டதுபோல, நாம் அவரை ஏற்றுக்கொள்ளும்போது நம்முடைய பழைய சரீரம் பிரிந்து புதிதாகிறது என்றும்,
இயேசுவின் சரீரமும் இரத்தமும் அணுச்சேர்க்கையைப்போல (FUSION) நமது உடலில் திருவிருந்தின்போது ஒன்றாகச் சேர்க்கப்படும்போது, உண்டாகும் சக்தி நம்மை ஜீவனுக்கு நேராக நடத்துவதோடு, அநேகரை நித்திய ஜீவனுக்கு நேராக நடத்தவும் வலிமையுள்ளது. அவர் உலகத்திற்கு ஒளியாக வந்தார், அவருடைய இரத்தத்தையும் சரீரத்தையும் நினைவுகூரும்போது மீண்டும் அந்த ஒளியினையே பிரதிபலிக்கிறோம்; இந்த சக்தி (வெளிச்சம்) உலகத்திற்கு வெளிப்படவேண்டும், அதனையே திருவிருந்து ஞாபகமூட்டுகின்றது என்றும், பரலோகத்தில் மணவாளனாக அவர் நம்மை வரவேற்கும்போது, 'இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தையே தரித்திருப்பார்' (வெளி 19:13), நாமும் அவரது இரத்தத்தால் கழுவப்பட்டிருந்தால் மாத்திரமே மணவாட்டியாக இயலும் என்றும் சொல்லி, இறுதி ஜெபத்தை மிகவும் தாழ்ந்த தொனியில் ஏறெடுத்தேன்.
ஆராதனை முடிந்ததும் என்னுடைய மனைவியினிடத்தில், 'நான் ஜெபித்தது புரிந்ததா?' என்று கேட்டபோது, அவளோ, 'முணு முணுன்னு' வாய்க்குள்ளேயே முணங்கியதைப் போல இருந்தது என்றதும், சற்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். ஆலயத்தின் வெளியே மரத்தின் நிழலிலே நான் நின்றுகொண்டிருந்தபோது, என் வாலிபம் நினைவுக்கு வந்தது. 20 வயது வாலிபனாக, ஒருமுறை பரி. மாற்குவின் ஆலயத்தில் நான் செய்தியளித்துவிட்டு, ஆலயத்திலிருந்து நேராக ஆவிக்குரிய வாழ்க்கையில் என்னை வழிநடத்தியவர்களுள் ஒருவரான எனது தெருவில் இருந்த போதகர் சாலமோன் அவர்களிடம் சென்று, 'நான் செய்த பிரசங்கம் நன்றாக இருந்ததா?' என்று கேட்டபோது, 'பிரசங்கம் உன்னுடையது அல்ல, கர்த்தருடையது' என்று சொல்லி வளர்ச்சிக்கு நேராக வழிகாட்டினார்.
இந்த நினைவைத் தொடர்ந்து, முற்பகுதி பிரசங்கம் ஜனங்களுக்குப் புரியவேண்டும், பிற்பகுதி ஜெபமோ அவருக்குப் புரிந்தால் போதும் என்ற அர்த்தம் மனதில் அழுத்தமானது. ஜெபம் என்பது யெகோவா தேவனுடன் பேசுவது, இதற்கு மனைவியினிடத்தில் நான் புரிந்ததா என்று கேட்டிருக்கவேண்டியதில்லையே என்றும், மனிதர்களுக்குப் புரியவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஜெபித்தால் தேவனை மறந்துவிடுவோம் என்றும் புரிந்துகொண்டேன். 20 வயதில் திருந்தியதிலேயே மீண்டும் சரிந்ததைப் அறிந்துகொண்டேன்.
Comments
Post a Comment