ஆலயத்துக்கு வெளியே ஆண்டவர்
2013 ஜனவரி 5, அன்று காலை திருநெல்வேலியிலிருந்து ரயிலில் புறப்பட்டு, 7 அன்று காலை 3.30 மணிக்கு கல்கத்தா வந்து சேர்ந்தோம். என்னோடு கூட எனது மனைவியின் மூத்த சகோதரர் மற்றும் அவரது நண்பர் என நாங்கள் மூன்று பேர். அன்று மாலை 8.30 மணிக்கு கல்கத்தாவிலிருந்து பீஹாரிலுள்ள டெஹ்ரி ஆன் சோன்-க்கு நாங்கள் மீண்டும் ரயில் பயணத்தைத் தொடரவேண்டும். உடமைகளுடனும், உறக்கத்துடனும் ரயில் நிலையத்தின் பயணியர் தங்கும் அறைக்குச் சென்றோம். காலை 8 மணி வரை அங்கு நித்திரை செய்து இளைப்பாறினோம். களைப்பு அகன்றதும் கால் நடையாய் சில இடங்களைச் சென்று சுற்றிப் பார்க்கலாம் எனப் புறப்பட்டுச் சென்றோம். 'ஸ்ரீலெதர்' என்ற கடையில் ஷு வாங்க நான் விரும்பினேன்; அது சற்று தொலைவிலிருந்ததால், நேரத்தைக் கணக்கில் கொண்டு பேருந்தில் பயணமானோம். ஷு வாங்கிய பின், கடையிலிருந்து ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தோம். வழியில் ஆங்காங்கே கண்களில் தென்பட்ட பழைய ஆலயங்களைக் கண்டு, முன் நாட்களில் அங்கு ஊழியம் செய்த மிஷனரிகளைக் குறித்துப் பேசிக்கொண்டோம்.
Church Road என்ற சாலையின் வழியே நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது, 'சர்ச் ரோடு' என்று இதற்கு எப்படி பெயர் வந்திருக்கும்? கட்டாயம் ஏதாவது ஒரு சர்ச் இங்கே இருக்கும் என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். கால்கள் நடக்க, கண்கள் ஆலயத்தைத் தேட, நாங்கள் நினைத்தது போலவே, சாலையின் வலப்புறத்தில் ஓர் பழமையான ஆலயம். சாலையின் இடப்புறத்திலே நடந்துகொண்டிருந்த நாங்கள் அப்படியே நின்று, ஆலயத்தின் நுழை வாயிலை சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பக்கம் நாங்கள் செல்ல முற்பட்டபோது, சாலையில் வேகமாகச் சென்ற வாகனங்கள் எங்களைத் தாமதிக்கச் செய்தன. அப்போது, ஆலயத்தின் வாசலிலிருந்து வெளியே வந்து, சாலையைக் கடந்து எங்களிடம் வந்தார் ஒருவர், 'என்ன பார்க்கிறீங்க?' என்று கேட்டார்; 'ஆலயத்தைப் பார்க்கிறோம்' என பதிலுரைத்து, உள்ளே சென்று பார்க்கலாமா? என மெல்லக் கேட்டோம்.
'ஆலயத்த ஞாயிற்றுக் கிழமையில மட்டுந்தான் திறப்பாங்க, மத்த நாள்ல பூட்டிதான் கிடக்கும், வெளிய நின்னு வேணும்னா நீங்க பாக்கலாம்' என்றார் அவர். 'வெளியே இருந்து பார்த்தாலே போதும்' என்றோம். ஆலயத்தின் நுழை வாயிலில் காவலர் ஒருவர் சீருடையுடன் நின்றுகொண்டிருந்ததார். எங்களுடன் பேசிய அந்த சகோதரரிடம், எங்களை உள்ளே அழைத்துச் செல்லும்படி நாங்கள் கேட்க, அவரோ 'நீங்க போங்க, நான் இங்கே இருந்து காவலருக்கு கையசைச்சுச் சொல்லுறேன்' என்று காவலரைப் பார்த்து தூரத்திலிருந்து செய்கையில் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். நாங்கள் காவலரைச் சந்தித்தோம்; 'நீங்க யார்?' என்றார், நாங்கள் வட இந்தியாவில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கிற தமிழகத்தைச் சேர்ந்த மிஷனரிகள் எனப் பதிலுரைத்துவிட்டு, உள்ளே போய்ப் பார்க்கலாமா எனக் கேட்டோம். காவலாளியோ, 'சர்ச் மெம்பர மட்டுந்தான் உள்ள உடுவாங்க' மத்தவங்க உள்ள போக முடியாது எனச் சொல்லிக்கொண்டே, அங்கு தூரத்திலிருந்த மற்றொருவரை அழைத்தார், அவரிடமும் நாங்கள் எங்களை அறிமுகப்படுத்தி, ஆலயத்தைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்க, அவரும் 'சர்ச் மெம்பர மட்டுந்தான் உள்ள உடுவாங்க, மத்தவங்க உள்ளே போகமுடியாது' 'நீங்க சர்ச் மெ;பரா?' என்ற பதிலோடு கூடிய கேள்வியை முன் வைத்தபோது, 'நாங்கள் கிறிஸ்துவின் சரீரத்தின் மெம்பர்கள்;' எனப் பதிலளித்தேன். இதனைக் கேட்ட அவர், பார்க்கமுடிhது என எங்களைத் திருப்பி அனுப்பிவிட்டார்.
உள்ளே போகாவிட்டாலும் பரவாயில்லை, கோட்டைச் சுவருக்கு உள்ளே வந்தாவது ஆலயத்தைப் பார்க்கலாமா? என நாங்கள் கேட்டபோதும் அனுமதி மறுக்கப்பட்டது. அந்த இரும்பு நுழை வாயிலை காவலர் சற்று திறந்தபோது, ஆலயத்திற்குப் போகும் வழியிலே, ஆலயத்தின் வெளியிலே, இயேசுவின் சிலை ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது எங்கள் கண்ணில் பட்டது, ஊழியர்களைக் கூட உள்ளே விடாத இவர்களது நிலையைக் கண்டு நிலை குலைந்துபோனேன். துக்கம் தொண்டையை அடைக்க கொஞ்ச தூரத்திற்கு நாங்கள் மூவரும் அதனையே பேசிக்கொண்டு நடந்துசென்றோம். ஆலயத்தைப் பார்க்க வேறு ஏதாவது வழி உண்டா எனத் தேடியபோது, அருகாமையிலிருந்த பாலத்தின் மேல் ஏறினோம், அங்கிருந்து ஆலயத்தின் உப்பரிக்கை தெரிந்தது. இயேசுவின் சிலையோ ஆலயத்தின் முன்னே தரையிலிருந்தது அப்போது என் நினைவில் வந்தது.
உப்பரிக்கையிலிருந்து, இயேசுவைத் தரையிலே தள்ளிவிட்டு, ஆலயத்தின் வெளியிலே, வாசல் வழியிலே சிலையாய் நிறுத்தியிருக்கிறார்களோ? என்ற கேள்வி உள்ளத்திலே, பிசாசை ஜெயித்தவரின் நாமம், இப்படிப்பட்டோரால் கேலிக்கிடமாவதைக் கண்டு மனதில் துக்கத்திற்கு இடம் உண்டானது; இதோ, படத்திலே அந்த ஆலயத்தின் விலாசம்.
கிழக்கு இந்தியக் கம்பெனியைச் சேர்ந்தவரும், பிஷப் கல்லூரியின் முதல்வருமான Rev. Professor Holmes, ஹவுரா மக்கள் ஆராதிக்க ஓர் ஆலயத்தைக் கட்டும்படியாக வழங்கிய நிலத்தில் கட்டப்பட்டுள்ளதே St.Thomas Church. 1830-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இவ்வாலயம், 1832-ம் ஆண்டு by Bishop Daniel Wilson அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பரந்து விரிந்த நிலப்பரப்பில் அமைந்துள்ள இவ்வாலயம் 'ஹவுரா சர்ச்' என்றே மக்களால் அழைக்கப்பட்டுவந்தது; 1843 முதல் St.Thomas Church என்ற பெயருடன் அறியப்பட்டுவருகிறது. இந்த ஆலயத்தின் வளாகத்தில் உள்ள பள்ளி, 1860-1865 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், Rev. Dr. William Spencer அவர்களால் 'Anglo-Indian' பிள்ளைகளுக்காக நிறுவப்பட்டது.
1832-ம் ஆண்டு 5 ஆண்கள் உட்பட ஒரு பெண் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் பெற்றனர். 1833 மற்றும் 1834 ஆண்டுகளில் மேலும் எட்டுபேர் ஞானஸ்நானம் பெற்றனர். 1855-ம் ஆண்டு 26 பேர் ஞானஸ்நானம் பெற ஆயத்தமாக வந்தபோது, அவர்கள் உண்மையாய் இயேசுவை ஏற்றுக்கொண்டதினால் அல்ல, உலகத்தின் பணம் மற்றும் வாழ்வின் நலன்களுக்காகவே ஞானஸ்நானம் பெற விரும்புகின்றனர் என்பதை அறிந்த பிஷப், அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்காமல் நிராகரித்த வரலாறும் உண்டு. அவர்களை நிராகரித்தது சரிதான், ஆனால், ஊழியர்கள் எங்களை நிராகரித்தது அதற்கு குறைதான். அன்று உலகத்தோடு ஒட்டிக்கொண்டவர்களை அடையாளம் கண்டு சபை நிராகரித்தது; இன்றோ உலகத்தோடு சபையே ஒட்டிக்கொண்டு, தேவனையும் தேவ மனிதர்களையும் நிராகரிக்கிறது. அன்று மாணவர்கள் உள்ளே; மிஷனரிகள் நாங்கள் வெளியே.
சர்ச்சையில் சர்ச் மணி
1877-ம் ஆண்டின் குறிப்புகளின்படி (Catalogue issued by the bell-founders John Warner & Sons of London) ஹவுரா ஆலயத்திற்கு ஆலய மணி வழங்கப்பட்டிருக்கின்றது. 2002-ம் ஆண்டு ஆங்கிலேயர் இருவர் ஹவுரா ஆலயத்தினைப் பார்வையிட வந்து, நகரத்தில் இரு வாரங்கள் தங்கியிருந்தபோது, ஆலயத்தில் மணி ஓசை ஏதும் எழாததைக் குறித்து அறிந்து, ஆலயத்தைப் பல்வேறு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு நாடு திரும்பினர். 2010-ல் Mr.Peter Rivet கல்கத்தா நகருக்கு வந்து, ஹவுரா ஆலயத்தைப் பார்வையிட்டபோது, ஆலயத்தின் மணி பொருத்தப்பட்ட இடத்திலிருந்து கழற்றப்பட்டிருப்பதைக் கண்டு, அதனைப் புகைப்படம் எடுத்தார்.
ஜனங்களை ஆலய ஆராதனைக்கு அழைப்பதும், வீட்டில் அனுதின குடும்ப ஜெபத்தை செய்ய ஞாபமூட்டுவதும் ஆலய மணியின் பிரதான பணி. ஆனால், இன்று அந்த பிரதான பணிணினைச் செய்யும் மணியினைக் கூட இழந்ததாகவே நிற்கிறது இந்த ஆலயம். வாசலண்டை நின்று ஆலயம் திறக்கப்படாதா! என ஆராதிக்க வருவோர் காத்துக்கிடக்கும் நிலையையும் உருவாக்கிவிட்டனர் இந்த ஆலய நிர்வாகிகள். ஞாயிறு அன்று ஆராதனைக்காக சென்றபோது, ஆலயம் பூட்டியிருந்ததாகவும், ஆராதனை நடத்துபவருக்காக பூட்டப்பட்ட ஆலயத்தின் வெளியே ஜனங்களுடன் அவரும் காத்துக்கிடக்க நேரிட்டதாகவும் Mr.George A Dawson 2002-ம் ஆண்டு தனது குறிப்பில் எழுதியுள்ளார். ஜனங்களின் கண்கள் காண இயலாதபடி ஆலயத்தைச் சுற்றிலும் கல்வி நிறுவன கட்டிடங்களே கண்ணில் தெரிகின்றன என்றும் இவர் தனது குறிப்பேட்டில் பதிந்துவைத்துள்ளார்.
மணியும் இல்லை, இறைப் பணியும் சரிவர செய்யப்படவில்லை, தேடி வரும் ஆத்துமாக்களுக்கும் தேவாலயம் திறக்கப்படாத நிலை, தேவ ஊழியம் இங்கு நடைபெறுகிறது என்பதை நம்ப மறுக்கிறதே. தேடிவரும் ஆத்துமாக்களுக்கே கதவைத் திறக்காதவர்கள், தேடிச் சென்று ஆத்துமாக்களுக்கு அவரை அறிவிப்பாரோ! இது வெள்ளை மிஷனரி இந்தியக் கிறிஸ்தவனுக்குச் சேர்த்துவைத்த சொத்து என இவர்கள் நினைத்துவிட்டார்களோ?
Comments
Post a Comment