Skip to main content

இரண்டு வேதாகமங்கள் இல்லையே

 


இரண்டு வேதாகமங்கள் இல்லையே


 

மார்ச் 28, காலை சுமார் 9.30 மணி, திருநெல்வேலி ஜங்சன் ரயில் நிலையத்தில் குடும்பமாக கன்னியாக்குமரி ஹவுரா ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். ரயில் வருவதற்குச் சற்று தாமதமாகிக்கொண்டிருந்ததால், 5-ம் எண் நடைமேடையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தேன். ரயிலில் உண்ணவேண்டிய உணவை, நடைமேடையிலேயே உட்கார்ந்து உண்ணத் தொடங்கினோம். R.A.C -ல் இருந்த இருக்கையின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளும்படியாக, நிலையத்தின் முன் நுழை வாசலில் நிறுவப்பட்டிருந்த இரு கணணிகளில் அவ்வப்போது சென்று முயற்சித்துக்கொண்டிந்தேன் நான்; இயங்காத அதனைக் கண்டு ஏமாற்றத்தோடு நின்றுகொண்டிருந்தபோது, விசாரணை அலுவலகம் இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அங்கு நின்ற ஒருவரை அணுகியபோது, அவர் மூலையினை விரல் காட்டி அங்கு இருக்கிறது என்றார்; சென்றேன், அங்கோ, தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த ஒரு மறைவிடத்திற்குள் ஒரு பெண் உட்கார்ந்துகொண்டிருந்தார். ஏதோ எழுதிக்கொண்டிருந்தார், கணணி ஒன்று ON செய்யப்பட்ட நிலையில் மேஜையில் இருந்தது. விசாரணை அலுவலகம் இதுவா? என்ற கேள்வியோடு அந்தப் பெண்ணின்

முகத்தை நான் பார்த்தபோது, மெல்ல நிமிர்ந்த அந்தப் பெண்ணிடத்தில், PNR Status பார்க்கவேண்டும் என்று சொன்னேன். Server down ஆக இருக்கிறது, நீங்கள் மொபைலில் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். எனது கைபேசியில் அதனைப் பார்க்கும் வசதி இல்லாதிருந்ததினால், மற்றொருவரை தொடர்புகொண்டு இருக்கைகளின் விபரங்களை அறிந்துகொண்டேன். ரயில் கிளம்பியது, இருக்கைகள் பல காலியாகக் கிடந்தன. வண்டி ஸ்ரீரங்கத்தை அடைந்ததும் குடும்பமாக நாங்கள் இருந்த இருக்கைகளுக்கு அருகிலான இருக்கைகளில் புரோகிதர் ஒருவர் மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் குடும்பமாகவும் மற்றொரு புரோகிதர் தனியாகவும் வந்து அமர்ந்தனர். நீண்ட நேர மௌனத்திற்குப் பின்னர், மெல்ல என்னிடத்தில் பேச்சுக் கொடுத்த அவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றியும், இந்து மதத்தினைப் பற்றியும் ஒப்பிட்டுப் பேசத் தொடங்கினர். என்னுடைய மூதாதையர்கள் ஒருவேளை இந்துக்களாக இருந்திருக்கலாம், ஆனால், நாங்களோ பல தலைமுறைகளாக இயேசுவையே அறிந்துகொண்டு அவரையே பின்பற்றுகிறோம் என்று கிறிஸ்துவை அழுத்தமாக நான் பேசிக்கொண்டிருந்தேன்; அத்துடன் என்னிடமிருந்த, எனது தாயார் ரூபாய் 1650.00 க்கு வாங்கிக்கொடுத்திருந்த பெரிய எழுத்துக்களுடனான, கொரியாவில் பிரிண்ட் செய்யப்பட்ட வேதாகமத்தையும் அவர்களிடம் காண்பித்தேன். வேதாகமத்தை என்னிடமிருந்து வாங்கிய ஒரு புரோகிதர், அதனை தன் தலையில் வைத்து ஒத்திக்கொண்டார், உள்ளே திறந்து 'மிக அழகாயிருக்கிறது' என்றார்; பக்கத்தில் அமர்ந்திருந்த, அவரது மனைவி 'எத்தனை மெல்லிசா இருக்குல்ல இந்த பேப்பர்' என்று சொன்னார். அப்போது, மற்றொரு புரோகிதர் தனது பையினைத் திறந்தார், உள்ளேயிருந்து புத்தகம் ஒன்றினை எடுத்து என்னிடம் கொடுத்தார்; பார்த்தேன், அதுவோ 'பகவத் கீதை'. இதன் விலை 100 ரூபாய், நான் இலவசமாகத் தருகிறேன், இதனை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள், சந்தேகம் ஏதும் இருந்தால் என்னிடம் இந்த விலாசத்தில் தொடர்புகொண்டு பேசுங்கள் என்றார். உங்களுக்கு என்றேன், என்னிடம் இன்னொரு பகவத்கீதை இருக்கிறது, அதை நான் வாசிக்கிறேன் என்றார். வாழ்க்கையின் கேள்விகள் அனைத்துக்கும் விடை தரும் வேதத்தை 22  முறை வாசித்திருக்கும் நானோ, அந்த பகவத்கீதையை அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு, என் தாயார் வாங்கிக்கொடுத்த, நான் உபயோகிக்கும் வேதாகமத்தை திரும்ப வாங்கிக்கொண்டேன். மருத்துவப் பரிசோதனைக்காக திருநெல்வேலி வந்துவிட்டு, அவசர அவசரமாக பீஹார் திரும்பிக்கொண்டிருந்த நான் மற்றவருக்குக் கொடுக்க 'இரண்டு வேதாகமங்கள் இல்லையே' என்ற சோகத்துக்குள்ளானேன்.

Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே