ஆண்டவரின் படைப்பினுள் புதைந்திருக்கும் ஆச்சரியங்கள்தான் எத்தனை? எத்தனை? நம்முடைய வாழ்க்கையைக் குறித்து மாத்திரமே சிந்திக்கிறவர்களாகவும், நம்முடைய தேவைகளுக்காக மாத்திரமே தினமும் பயணிக்கிறவர்களாக நாம் காணப்படுவோமென்றால், நம்முடைய கண்களால் அவைகளைக் காணக்கூடாதபடிக்கு, நமது கால்கள் அவைகளைக் கடந்துசென்றுவிடும். சூழ்நிலைகளில் மாத்திரமல்ல, நம்மைச் சுற்றிலும் நடந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நம்முடைய வாழ்க்கைக்காக ஆண்டவர் வைத்திருக்கும் செய்தி உண்டு. அநேக நேரங்களில், நமது அருகில் நிகழும் அற்புதங்களைக் காணும் கண்களற்றவர்களாக, அவை எங்கோ நடக்கின்றதென எண்ணி தேடி ஓடுகின்றோம். 'உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்' (சங். 119:18) என்று சங்கீதக்காரன் ஜெபித்ததுபோல ஜெபிப்போமென்றால், வேதத்தில் உள்ள அதிசயங்களை மாத்திரமல்ல, வேதத்தைச் சார்ந்து வெளியில் நடக்கும் அதிசயங்களையும் காணுமளவிற்கு நமது கண்கள் திறந்துவிடும்.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மாலை நேரம், சுமார் 5:30 மணி, எங்களது வீட்டின் அருகில் நாங்கள் பராமரித்துவரும் சில செடிகொடிகள் மற்றும் வாழை மரங்கள் அடங்கிய சிறியதோர் தோட்டத்தினை நானும் எனது மனைவியும் இணைந்து சுத்தம் செய்துகொண்டிருந்தோம். செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டு, குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்தபோது, தரையிலிருந்து உயரமாக வளர்ந்திருந்த ஒரு கொடி எங்கள் கண்களில் பட்டது. இதனால் என்ன பிரயோஜனம்? இது ஏன் இடத்தை அடைக்கிறது? என்ற எண்ணத்தில் கையிலிருந்த கத்தியினால் கைகளால் எட்டிய அளவு உயரத்திற்கு அதனை அறுத்துவிட்டோம். இனி அது வளருவதற்கு வாய்ப்பே இல்லை; இடமும் சுத்தமாகிவிட்டது என்ற திருப்தியில் வீட்டிற்குச் சென்றோம். என்றபோதிலும், அவ்வப்போது நான் தோட்டத்திற்குச் செல்லும்போதெல்லாம், நான் வெட்டிவிட்ட அந்தச் செடியில் விடப்பட்டிருந்த மேல்பகுதி சுவற்றின் மேலே தொங்கிக்கொண்டிருப்பதை தினம் தினம் பார்த்துவருவது வழக்கம். தரையிலிருந்து வெட்டப்பட்டு பல மாதங்கள் சென்றபின்னும், அதன் மேல் பகுதியோ பட்டுப்போகாமல், அதன் இலைகளும் இன்னும் பச்சையாகவே காணப்பட்டன. எனக்கோ ஆச்சரியம்! இது எப்படி சாத்தியம்? இந்தச் செடிக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைக்கிறது? ஒருவேளை அவ்வப்போது பெய்கின்ற மழை நீரைக் குடித்து வளருகின்றதோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். சுவற்றின் மேலேயோ, அதற்கு தண்ணீர் கிடைப்பதற்கான எந்தவித் சாத்தியக்கூறுகளும் இல்லாதிருந்தது. அப்படியிருக்க, திடீரென ஒருநாள், நான் வெட்டிவிட்ட கொடியின் தொங்கிக்கொண்டிருந்த கீழ்ப்பகுதியைப் பார்த்தபோது, அது என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கிற்று! ஆம், அது வேரிலிருந்து கீழே தரையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டிருந்தது. மெல்ல மெல்ல வளர்ந்து, சுமார் ஒரு மாதத்திற்குள்ளாக அது தரையையும் தொட்டுவிட்டது. இறைவனின் படைப்பில் இப்படியும் ஓர் அதிசய செடியா? என்று ஆச்சரியத்தை எண்ணத்தில் சுமந்தவண்ணம் வீட்டிற்குச் சென்றேன். மனைவியினிடமும் அதைக் குறித்து எடுத்துச் சொன்னேன், அப்போது, 'நீ அந்தச் செடியைப்போலிருக்கிறாயா?' என்ற கேள்வி என் உள்ளத்தில் உதித்தது.
ஆம், பல நேரங்களில் இடையில் வெட்டப்படும்போது, நம்மைச் செழுமைக்குள்ளாக்கும் பல நீர்ப்பாய்ச்சலான இடங்களிலிருந்து நாம் துண்டிக்கப்படும்போது, வேரறுக்கப்படும்போது நாம் சோர்ந்துபோய்விடுகின்றோம்; இனி நம்மால் வாழ இயலாது என்ற வருத்தமானத் தீர்மானத்திற்குள் வந்துவிடுகின்றோம். நமக்குள் இருக்கும் ஆவியானவரின் உயிரூட்டத்தினை உணர மறந்துவிடுகின்றோம். கிளைகளின் வழியாகவும் மற்றும் இலைகளின் வழியாகவும் மேல் நோக்கி மாத்திரமல்ல, வெட்டப்பட்ட வேர்களிலிருந்து கீழ்நோக்கியும் வளர்ந்து, மீண்டும் அதே இடத்தில் காலூன்றி, நம்மை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்ற நினைவினை இழந்துவிடுகின்றோம். நம்முடைய ஜீவனைக் காக்கும்படியாக, வேரில் வளரவேண்டிய நேரம் என்பதை மறந்து, வெளியில் வெயிலில் காய்ந்துபோய்விடுகின்றோம், வெட்டிவிடப்பட்ட இடத்திலேயே வாடிப்போய்விடுகின்றோம். ஆம், வெட்டப்பட்ட நிலையில் பலரது வாழ்க்கை பட்டுப்போனதற்குக் காரணம், தரையை நோக்கி அவர்கள் திரும்பி வளராததே. ஆம், நம்மை தாங்கி நிற்கும், ஆவிக்குரிய அஸ்திபாரங்களாகிய வேதவாசிப்பு, ஜெபம் மற்றும் உபவாசம் ஆகியவைகளுடன் தேவசமுகத்தை நாடுவோமென்றால், எந்நிலையில் காணப்பட்டாலும் முந்நிலையை அடையமுடியும்.
அத்துடன் மற்றொரு பாடமும் என் சிந்தையைத் தொடர்ந்து தொட்டது. அநேக நேரங்களில் நாம் உயர உயர வளரும்போது, தரையினையும், தரையுடனான தொடர்பினையும் மறந்துவிடுகின்றோம்; முன் நாட்களில், நமக்கு ஊற்றாயிருந்த, துரவாயிருந்த வேதத்திற்கு அதிக இடமளிக்காது போய்விடுகின்றோம். ஆதியில் கொண்டிருந்த அன்பினை விட்டு அகன்று சென்றுவிடுகின்றோம். இத்தகைய நிலையில் நாம் காணப்படுவோமென்றால், எத்தனை உயரத்தில் நமது இலைகள் பச்சைப் பசேலென இருந்தாலும், ஊழியத்தின் பாதையில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், ஜனங்களால் அதிகம் மதிக்கப்படும் நிலையில் காணப்பட்டாலும், ஆதியில் கொண்டிருந்த அன்பாகிய தரையினை நோக்கி வளரவேண்டியது அவசியம். அந்த காலத்தையும் நாம் தவறவிட்டுவிடுவோமென்றால், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை காய்ந்துபோய்விடுவது நிச்சயம். இடையில் வெட்டப்பட்டபோதிலும், பட்டுப்போய்விடாமல் மீண்டும் தரையை நோக்கி வளர்ந்து வேரூன்றி தன் வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொண்ட அந்த செடியைப்போல நாமும் மாற தேவன் உதவி செய்வாராக; ஆமென்! கீழிருந்து மேல் வளருவது மாத்திரம் வளர்ச்சியல்ல; மேலிருந்து கீழ் வளருவதும் வளர்ச்சியே!
Comments
Post a Comment