முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு மன்னர்கள்


 
இரண்டு மன்னர்கள்


குடும்பமாகச் சுற்றுலா சென்றிருந்தோம், கன்னியாக்குமரி, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை என்பது எங்களது பயண வரிசை. அதனைத் தொடர்ந்து, அலுவலக கூடுகைக்காகக் குன்னூர் சென்றிருந்தோம். இந்த பயணங்களின்போது, மறக்க இயலாது எனது நெஞ்சில் நின்ற இரண்டு மனிதர்களைப் பற்றிய கட்டுரை இது. 

பத்மநாதபுரம் அரண்மனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கடைசியாக களைப்புடன் வெளியேறும் வழியில் வந்துகொண்டிருந்தோம். சற்று இளைப்பாறலாம் என தோட்டத்தை ஒட்டிய அரண்மனையின் உட்புற படிக்கட்டு ஒன்றில் குடும்பத்தினரோடு அமர்ந்தோம். அப்பொழுது வயதான ஒரு நபர் அவ்வழியே உள்ளே நுழை வாசலின் வழியே வந்துகொண்டிருந்தார். கையில் இரண்டு பைகள், சட்டை லுங்கி அணிந்திருந்தார். அவர் படியில் ஏறி உள்ளே நுழையும்போது, அங்கு அமர்ந்திருந்த எங்களது குடும்பத்தின் சின்னஞ்சிறு மொட்டுக்களைப் பார்த்துச் சிரித்தார்; அவர் யார்? என்பதை அறியாத குழந்தைகள் பதிலுக்குப் பாசம் தரத் தயங்கியதை நான் உணர்ந்துகொண்டேன். பின்னர் என்னிடத்தில், 'இது உங்க பிள்ளைகளா?' என்று கேட்டார். நானோ, எனது மகனை மட்டும் காட்டி, இவன்தான் என்னுடைய பையன், இவர்கள் எனது குடும்பத்தின் பிள்ளைகள் என அடையாளம் சொன்னேன். நீங்க யாரு? என நான் கேட்க, நான் இங்கே வேலை செய்கிறவங்களுக்கு டீ போட்டு கொண்டுவந்து கொடுப்பேன், டீ குடிக்கிறீங்களா? என கேட்டார். பலர் இருப்பதால் பரவாயில்லை என்றேன் நான். அந்த முதியவரின் புன்சிரிப்பும், அளவளாவலும், விசாரித்துப் பேசிய விதமும் மற்றும் குழந்தைகளோடு கொஞ்ச முற்பட்டதும், அரண்மனையில் எங்களுக்குக் கிடைத்த அற்புதமான ஓர் வரவேற்பு. பத்மநாதபுரம் அரண்மனையில் இன்று அவர்தான் மன்னர் என என் உள்ளம் ஒத்துக்கொண்ட நேரம் அது. நினைவில் நின்ற அவரை எனது குடும்பத்தினருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 



ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் கூடுகை ஒன்றில் பங்கேற்பதற்காக குன்னூர் சென்றிருந்தேன். இரண்டு நாட்கள் கிறிஸ்த விடுதி  ஒன்றில் தங்கியிருந்தேன். நல்ல உணவுகள் கிடைத்தன, சுவையாகவும் இருந்தன. நான் சுவைத்து உண்ணும் இந்த உணவின் சமையலுக்குச் சொந்தக்காரர் யார்? என்பதை அறிய எனது மனம் விரும்பியது. அப்படியே, ஒருநாள் காலையில் உணவினை உட்கொண்ட பின்னர், சமையல் அறைக்குள் நுழைந்தேன் நான். சிறிய அறை அது; யார் சமைக்கிறார்கள் என அங்கே விசாரித்தேன்; உடனே, நான்தான் என்று ஒரு முதியவர் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். சாப்பாடு நன்றாக இருக்கிறது, அதனால சமைக்கிறது யாருன்னு பார்க்க ஆசைப்பட்டேன் அதான் வந்தேன் என்றேன் அவரிடம். அவர் வாங்க என பாசத்தோடு என்னை அழைத்ததோடு, என்னை சமையலறையில் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அச்சமயம் அவரைப் பற்றி சற்று விசாரிக்கத் தொடங்கினபோது, அவர் என்னிடத்தில்...

என் பெயர் கோபாலகிருஷ்ணன், பாரம்பரிய பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சுமார் இருபது ஆண்டுகளாக மைசூர் அரண்மனையில் சமையல்காரராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அச்சமயத்தில், இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிம்மதி இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதும் நிம்மதி கிடைத்ததால், தொடர்ந்து அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர், எனது பெயரை லாரன்ஸ் என மாற்றியிருக்கிறேன். எந்த ஆலயத்திற்குச் செல்வது என்பதை அறியாதிருந்ததினால், அருகிலிருந்த ரோமன் கத்தோலிக்கக் கோவிலுக்குச் செல்லத் தொடங்கினேன். இங்கே நான் ஒருவனாகத்தான் சமைக்கிறேன் என்றார். சபைகளின் வித்தியாசத்தைக் கூட அப்போது அவர் சரியாக அறிந்திருக்கவில்லை; ஆனால், இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்தார். அவருடனான உரையாடலில், அவர் யாருடைய வற்புறுத்துதலின் பேரிலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. தானே தேடி கண்டுபிடித்துக்கொண்ட தாகம் அவரது தொனிகளில் தென்பட்டது. தானாக நிம்மதியின் வழியினைத் தேடி அறிந்துகொண்டாலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் இன்னும் சரியாக நடத்தப்படவில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். பதினைந்து ஆண்டுகளாக அங்கு சமைத்துக்கொண்டிருக்கும் அவரது உணவினைச் சுவைத்திருப்பவர் பலர்; ஆனால், அவரது வாழ்வுக்கு சுவையூட்ட ஒருவர் தேவை என்று உணர்ந்த நான், என்னையும் ஒரு மிஷனரியாக, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவனாக அறிமுகப்படுத்திக்கொண்டு, அவருடனும் ஆவிக்குரிய சில காரியங்களைப் பகிர்ந்துகொண்டு, பாசத்துடன் விடைபெற்றேன். அவரது உணவினால் திருப்தியான நான், எனது வார்த்தைகளால் அவரை திருப்திப்படுத்தின தருணம் அது. அந்த சமையலறையில் அன்று அவருக்கு நான் சமையல்காரன். 

பல நேரங்களில் சுவைமிக்க பலவற்றிற்குச் சொந்தமானவர்களை நாம் மறந்துவிட்டு, உணவை மட்டும் சுவைத்துவிட்டு வந்துவிடுகின்றோம். நமது வாழ்க்கைக்குச் சுவையூட்டும் சொந்தக்காரர்களை நாம் அடையாளம் கண்டிருக்கிறோமா? அவர்கள் யார் என தெரியுமா? அவர்களை வாழ்த்தியிருக்கிறோமா? எத்தனையோ பேர் அவ்வப்போது வாழ்வில் இடையே வந்துநமக்கு மணமூட்டி மகிழவைக்கின்றனரே, அவர்களைக் குறித்த அறிமுகம் அவர்களது முகத்தை மலரச் செய்யும். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச...

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவ...

உருப்படியான புள்ள!

உருப்படியான புள்ள! தூத்துக்குடியிலுள்ள வங்கி ஒன்றில் எனது மனைவி பெயரில் கணக்கு ஒன்று தொடங்குவதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாளே வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிரப்பி, புகைப்படம் இல்லாததினால், அடுத்த நாள் காலையில் வங்கிக்குச் செல்லும் வழியில் உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்து படிவத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அடுத்த நாள் வங்கிக்குச் செல்லும் வழியில் ஏதாவது ஸ்டூடியோ இருக்கிறதா என தேடிக்கொண்டே சென்றேன்; அப்பொழுது "JPN Studio உடனடி போட்டோ பிரின்ட் கிடைக்கும்" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதன் உள்ளே நுழைந்தேன், பெரியவர்கள் ஒரு சிறிய பையன் உட்கார்ந்திருந்தான், அருகே இரண்டு அமர்ந்திருந்தனர். நான் அச்சிறுவனிடம், "போட்டோ எடுக்கனும், உடனே பிரின்ட் வேணும் கிடைக்குமா" என கேட்டேன். அவன் "ஓ கிடைக்குமே" என பதிலுரைத்தான். நான் யார் எடுப்பார்கள்? என கேட்டதற்கு "நான்தான்” அவன் பதில் சொன்னபோது, சற்று வியந்துபோனேன். அப்படியே அவன் என அமர்ந்திருந்த இருக்கையின் உள்ளே எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு கம்ப்யூட்டர் அர...