Skip to main content

எதைத் தெரிந்துகொள்வது?

 எதைத் 

தெரிந்துகொள்வது? 

www.sinegithan.in


செப்டம்பர் 30, சனிக்கிழமை மாலை 4:59, எனது WhatsApp -ல் 'இரண்டு நாட்கள்' LOP - Loss of pay என்ற செய்தி நான் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து அனுப்பபட்டிருந்தது. அந்த மாதத்தின் சில நாட்கள் நான் மிகவும் சுகவீனமாகக் காணப்பட்டேன்; என்றாலும், பணியின் நிமித்தம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற தவிர்க்க இயலாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து, எனது மனைவியும் சுகவீனத்தில் விழுந்ததால், சமையல் முதல் பிற வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு என்மேல் விழுந்தது. சில நாட்களில், எனது மகளும் உடல் சுகவீனமானபோது, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியதிருந்ததினாலும் மற்றும் எனது மனைவி தவிர்க்க இயலாத பணியின் நிமித்தம் அலுவலகத்திற்குத் தொடர்ந்து செல்ல நேரிட்டபோது, வீட்டில் தனியே இருக்கும் மகளைக் கவனித்துக்கொள்ளவேண்டியதிருந்தபடியினாலும், அவ்வப்போது அலுவலகத்திற்குத் தாமதமாக வரும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் நான்.  

நேரந்தவறாமல் தினந்தோறும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்பதில் மிகுந்த கரிசனையோடிருப்பவன் நான். என்றபோதிலும், இந்த மாதத்தின் சூழ்நிலையோ தன் வலைக்குள் என்னை சுருட்டிவைத்துக்கொண்டது. LOP - Loss of pay செய்தியைக் கண்டதும், 'மனைவி மற்றும் மகள் சுகவீனமாயிருந்தபோது, சில நாட்கள் அலுவலகத்திற்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்திருந்தால், LOP - Loss of pay -ஐ தவிர்த்திருக்கலாமே என்ற  எண்ணத்துடன் சற்று கவலையுடன் நான் இருந்தபோது, மறுநாளில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'அண்ணன், நல்லா இக்கிறீங்களா, உங்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருக்கிறேன், பெற்றுக்கொண்டதும் பதிலளிக்கவும்' என்று ஒரு சகோதரரின் குரல் அன்போடு மறுமுனையிலிருந்து ஒலிக்க, விலைமதிப்பான ஒன்றை அவர் அனுப்பித்தந்திருப்பதை நினைத்து ஆனந்தம் அந்நேரம் என் மனதை நிறைத்தது; அத்துடன், அவர் சொன்னதுபோலவே, 'கிப்ட்' –ம் என் கரங்களை வந்து அடைந்தது. என்றபோதிலும், இரவு படுக்கையிலிருந்தபோது, மீண்டும் LOP - Loss of pay என்ற செய்தி எனது மனை ஆக்கிரமித்தது. இரண்டு நாட்கள் உதவித் தொகை போய்விட்டதே என்ற கவலையில் அல்ல; மாறாக, ஊழியன் நான் இந்த வரிசையில் வந்துவிட்டேனே என்ற வருத்தத்தினால் உண்டான கவலை அது என்று மாற்று கோணத்தில் எனது மனம் 'நான் படுகின்ற கவலை சரியானதுதான்' என்று எனக்குள் சொல்லிக்கொள்ள, மறுபுறத்திலோ, என்னை சீர்ப்படுத்தும் சிந்தையோடு கர்த்தரின் மெல்லிய குரல் என் மனதோடு இடைபட்டதை உணர்ந்தேன். அந்த இரண்டு நாள் LOP - Loss of pay ஐ நினைத்து கவலைப்படப் போகிறாயா? அல்லது நான் உனக்கு கொடுத்திருக்கும் இந்த 'கிப்ட்' ஐ நினைத்து சந்தோஷப்படப்போகிறாயா? என்ற கர்த்தரின் வார்த்தை என் இதயத்தை வந்தடைய, கையிலிருந்த கவலையை தூக்கி எறிந்துவிட்டு, விலைமதிப்புள்ள 'கிப்ட்' ஐ கரத்திலெடுத்துக்கொண்டேன். 

நாமும் அநேக நேரங்களில், தேவன் கொடுத்திருக்கும் விலைமதிப்புள்ள மகிழ்ச்சியைக் காண இயலாதவர்களாக, கவலையிலேயே நம்மை மூழ்கடித்துவிடுகின்றோம். எதைத் தெரிந்துகொள்ளப்போகின்றாய்? என்ற கேள்விக்கு மாம்சத்தைச் சார்ந்தே பதில் எழுதுகின்றோம். தூசியைப் போன்றும், துகள்களைப் போன்றும் நம்மை விட்டுப் பறந்துபோகின்றவைகளைக் குறித்த கவலையினால் நம்மை நிறைந்தால், தேவன் தரும் சந்தோஷத்தை வாழ்க்கையில் அனுபவிக்க இயலாமற்போய்விடும். 


Comments

Popular posts from this blog

'பூமியதிர்ச்சி'

  'பூமியதிர்ச்சி ' 3 நவம்பர் 2023, இரவு 11:35 மணி, களைத்துப்போன உடலுடன் ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னுடைய காதுகளில் சல சலப்பின் சத்தம். விழிப்பதற்கு விழிகள் ஒத்துக்கொள்ள மறுத்தபோதிலும், என்ன நடக்கின்றது என்பதை படுத்துக்கொண்டே பார்ப்பதற்காக, கொஞ்சம் போர்வையை விலக்கி கண்களைத் திறந்து பார்த்தேன்; நான் படுத்திருக்கும் அறையின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்தன; அருகிலே, மனைவியும் மற்றும் மகளும் நடப்பதேதும் அறியாது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர்; ஆனால், அடுத்த அறையிலோ வெளிச்சம் ஒளிர்ந்துகொண்டிருந்தது. இன்னமுமா, எனது மகன் தூங்காமலிருக்கிறான்? என்ற கேள்வியோடு அவனது அறையினை நோக்கிய வண்ணம் எழுந்து அமர்ந்த எனது செவிகளில், அக்கம் பக்கத்தினர் பேசிக்கொள்ளும் சத்தம் விழ, கொஞ்சம் கொஞ்சமாக அது கூட்டமாக சிலர் நின்று பேசிக்கொள்ளும் அளவிற்கு வளர, என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முற்பட்டவனாக, படுக்கையிலிருந்து எழுந்து வீட்டு வாசற்கதவினை நோக்கி நடந்தேன் நான்; அச்சமையம், எனது மனைவியும் விழித்துக்கொண்டாள். கதவினைத் திறந்து பார்த்ததும், கதவிற்கு வெளியே பக்கத்து வீட்டார் அனைவரும் நின்று பேச

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

  எனக்கோ இரண்டு  பிரசங்கங்கள் டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன். மனைவி வீடு வந்து தேனீர்

'வாழ்க்கைக்கு வழக்கு'

  www.sinegithan.in அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன்.  சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே