புதன், 25 அக்டோபர், 2023

எதைத் தெரிந்துகொள்வது?

 எதைத் 

தெரிந்துகொள்வது? 

www.sinegithan.in


செப்டம்பர் 30, சனிக்கிழமை மாலை 4:59, எனது WhatsApp -ல் 'இரண்டு நாட்கள்' LOP - Loss of pay என்ற செய்தி நான் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து அனுப்பபட்டிருந்தது. அந்த மாதத்தின் சில நாட்கள் நான் மிகவும் சுகவீனமாகக் காணப்பட்டேன்; என்றாலும், பணியின் நிமித்தம் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற தவிர்க்க இயலாத சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து, எனது மனைவியும் சுகவீனத்தில் விழுந்ததால், சமையல் முதல் பிற வீட்டுக் காரியங்கள் அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு என்மேல் விழுந்தது. சில நாட்களில், எனது மகளும் உடல் சுகவீனமானபோது, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியதிருந்ததினாலும் மற்றும் எனது மனைவி தவிர்க்க இயலாத பணியின் நிமித்தம் அலுவலகத்திற்குத் தொடர்ந்து செல்ல நேரிட்டபோது, வீட்டில் தனியே இருக்கும் மகளைக் கவனித்துக்கொள்ளவேண்டியதிருந்தபடியினாலும், அவ்வப்போது அலுவலகத்திற்குத் தாமதமாக வரும் நிலைக்குத் தள்ளப்பட்டேன் நான்.  

நேரந்தவறாமல் தினந்தோறும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்பதில் மிகுந்த கரிசனையோடிருப்பவன் நான். என்றபோதிலும், இந்த மாதத்தின் சூழ்நிலையோ தன் வலைக்குள் என்னை சுருட்டிவைத்துக்கொண்டது. LOP - Loss of pay செய்தியைக் கண்டதும், 'மனைவி மற்றும் மகள் சுகவீனமாயிருந்தபோது, சில நாட்கள் அலுவலகத்திற்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து வீட்டில் இருந்திருந்தால், LOP - Loss of pay -ஐ தவிர்த்திருக்கலாமே என்ற  எண்ணத்துடன் சற்று கவலையுடன் நான் இருந்தபோது, மறுநாளில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'அண்ணன், நல்லா இக்கிறீங்களா, உங்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருக்கிறேன், பெற்றுக்கொண்டதும் பதிலளிக்கவும்' என்று ஒரு சகோதரரின் குரல் அன்போடு மறுமுனையிலிருந்து ஒலிக்க, விலைமதிப்பான ஒன்றை அவர் அனுப்பித்தந்திருப்பதை நினைத்து ஆனந்தம் அந்நேரம் என் மனதை நிறைத்தது; அத்துடன், அவர் சொன்னதுபோலவே, 'கிப்ட்' –ம் என் கரங்களை வந்து அடைந்தது. என்றபோதிலும், இரவு படுக்கையிலிருந்தபோது, மீண்டும் LOP - Loss of pay என்ற செய்தி எனது மனை ஆக்கிரமித்தது. இரண்டு நாட்கள் உதவித் தொகை போய்விட்டதே என்ற கவலையில் அல்ல; மாறாக, ஊழியன் நான் இந்த வரிசையில் வந்துவிட்டேனே என்ற வருத்தத்தினால் உண்டான கவலை அது என்று மாற்று கோணத்தில் எனது மனம் 'நான் படுகின்ற கவலை சரியானதுதான்' என்று எனக்குள் சொல்லிக்கொள்ள, மறுபுறத்திலோ, என்னை சீர்ப்படுத்தும் சிந்தையோடு கர்த்தரின் மெல்லிய குரல் என் மனதோடு இடைபட்டதை உணர்ந்தேன். அந்த இரண்டு நாள் LOP - Loss of pay ஐ நினைத்து கவலைப்படப் போகிறாயா? அல்லது நான் உனக்கு கொடுத்திருக்கும் இந்த 'கிப்ட்' ஐ நினைத்து சந்தோஷப்படப்போகிறாயா? என்ற கர்த்தரின் வார்த்தை என் இதயத்தை வந்தடைய, கையிலிருந்த கவலையை தூக்கி எறிந்துவிட்டு, விலைமதிப்புள்ள 'கிப்ட்' ஐ கரத்திலெடுத்துக்கொண்டேன். 

நாமும் அநேக நேரங்களில், தேவன் கொடுத்திருக்கும் விலைமதிப்புள்ள மகிழ்ச்சியைக் காண இயலாதவர்களாக, கவலையிலேயே நம்மை மூழ்கடித்துவிடுகின்றோம். எதைத் தெரிந்துகொள்ளப்போகின்றாய்? என்ற கேள்விக்கு மாம்சத்தைச் சார்ந்தே பதில் எழுதுகின்றோம். தூசியைப் போன்றும், துகள்களைப் போன்றும் நம்மை விட்டுப் பறந்துபோகின்றவைகளைக் குறித்த கவலையினால் நம்மை நிறைந்தால், தேவன் தரும் சந்தோஷத்தை வாழ்க்கையில் அனுபவிக்க இயலாமற்போய்விடும். 


புதன், 11 அக்டோபர், 2023

'வாழ்க்கைக்கு வழக்கு'


 

www.sinegithan.in


அக்டோபர் 10, 2023, மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரம். மனைவி மற்றும் மகளுடன் இருசக்கர வாகனத்தில் டெஹ்ரி ஆன் சோன் (பீஹார்) புறப்பட்டுச் சென்றேன். தையலகத்தில் கொடுக்கப்பட்ட சில துணிகளை பெற்றுக்கொண்டபின், புதிதாக சில ஆடைகளை வாங்கும்படியாக, அருகிலிருந்த 'சிட்டி காட்' துணிக்கடைக்குள் நுழைந்தோம். மனைவியும், மகளும் ஆடைகளை வாங்குவதில் கடையினுள் மும்முரமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நானோ கடையினுள் இருக்கும் துணிகள் மற்றும் பொருட்களைப் சுற்றிப் பார்த்தவண்ணம் அங்கும் இங்குமாக அன்ன நடையில் உலாவிக்கொண்டிருந்தேன். அப்போது, திடீரென எனது காலடியில் சுமார் ஆறு அல்லது ஏழு மாதங்களே ஆன ஓரு பச்சிளம் குழந்தை அதற்கே உரிய சிரிப்போடு, நெற்றியில் கருப்பு நிற பொட்டுடனும், சிகப்பு நிற ஆடையுடனும் தரையிலே தவழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு புன்சிரித்தவனாகவும், அதனையே உற்றுக் கவனித்தவனாகவும் நின்றுகொண்டிருந்தேன். 

சில விநாடிகளில் முதியவர் ஒருவர் அந்த குழந்தையின் அருகிலே வந்தார். அவர் வந்ததும் தரையிலிருக்கும் குழந்தையைத் தனது கைகளில் தூக்கிவிடுவார் என்று நினைத்தேன் நான்; ஆனால், அவரும் என்னைப் போலவே, அந்தக் குழந்தை தவழுவதைப் பார்த்து ரசித்தவராகத்தான் நின்றுகொண்டிருந்தார். அந்த குழந்தை நிச்சயம் அவருடையதுதான் என்பதை உறுதி செய்துகொண்ட நான், அவரை நோக்கி, 'ஐயா, கடையில் தரைப்பகுதியில் அனைவரும் காலணிகள் அணிந்து நடந்துசெல்லுவார்கள்; எனவே, குழந்தையின் உடல் அசுத்தமாகும்' என்று சொல்ல, எனது வார்த்தைகள் முடியுமுன், அந்த முதியவர் சற்றும் யோசிக்காமல் மறுமொழியாக என்னை நோக்கி, 'மிட்டி சே ன ஆயா, பகலே மிட்டி மே சல்னே தீஜியே' (மண்ணிலிருந்துதானே வந்தான், மண்ணிலே முதலில் நடக்கட்டும்) என்றார். அந்நிய கடவுளை வணங்கும் அந்த மனிதரின் வாயிலிருந்து வந்த இந்த அழகான வார்த்தைகள் சில நிமிடங்கள் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அந்த முதியவரைத் தொடர்ந்து 'மண்ணைத் தாண்டி மறுவுலகு இருக்கிறது' என்று ஆவியானவர் பேசினபோது, 'அந்த முதியவரின் பார்வை மண்ணிலிருந்து மண்ணை நோக்கியதே' என்பதை எனக்கு புரியவைத்தது. 'மண்ணாக, மண்ணிலிருந்துகொண்டு, மண்ணை நோக்கியே ஓடும் மக்கள்' இன்றைய நாட்களிலும் அநேகர் உண்டே.  

மண்ணினாலே நாம் உருவாக்கப்பட்டிருந்தாலும், மண்ணான உடலிலே உயிராக இந்த உலகிலே நாம் உலாவிக்கொண்டிருந்தாலும், நம்முடைய வாழ்க்கை மண்ணுக்குரியது மட்டுமல்ல. தண்ணீரைக் கொண்டுசெல்ல பாத்திரம் ஒன்று தேவை என்பதுபோல், நம் உயிரைச் சுமந்துசெல்லும் பாத்திரமே நமது உடல். தண்ணீரைக் குடித்ததும், பாத்திரத்தைத் தரையில் வைத்துவிடுவதுபோல், வாழ்க்கையை வாழ்ந்து முடிந்ததும், உடலை வைத்துவிட்டுத்தான் போகவேண்டும் நாம். வாகனத்தை இயக்க எரிபொருள் தேவை என்பதுபோல், உடலை இயக்க உள்ளே இருப்பதுதானே உயிர். எரிபொருளை இறைவன் எடுத்துக்கொண்டதும், எருவாகிப்போகுமே உடல்; என்றாலும், வாகனமும் (உடலும்), எரிபொருளும் (உயிரும்) ஒன்றாக இருக்கும்போது; வாகனத்தைக் கொண்டு நாம் செய்த செயல்களே, 'நமது வாழ்க்கையாகத் தீர்க்கப்படும்'. அந்த வாழ்க்கைக்குத்தான் வழக்கு; அதுதான் 'நியாயத்தீர்ப்பு'.


புதன், 27 செப்டம்பர், 2023

உருப்படியான புள்ள!

உருப்படியான புள்ள!


தூத்துக்குடியிலுள்ள வங்கி ஒன்றில் எனது மனைவி பெயரில் கணக்கு ஒன்று தொடங்குவதற்காக ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். முந்தின நாளே வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, நிரப்பி, புகைப்படம் இல்லாததினால், அடுத்த நாள் காலையில் வங்கிக்குச் செல்லும் வழியில் உடனடியாக ஏதாவது ஸ்டூடியோ ஒன்றில் புகைப்படம் எடுத்து படிவத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என நினைத்தேன். அடுத்த நாள் வங்கிக்குச் செல்லும் வழியில் ஏதாவது ஸ்டூடியோ இருக்கிறதா என தேடிக்கொண்டே சென்றேன்; அப்பொழுது "JPN Studio உடனடி போட்டோ பிரின்ட் கிடைக்கும்" என்ற போர்டு கண்ணில் பட்டது. அதன் உள்ளே நுழைந்தேன், பெரியவர்கள் ஒரு சிறிய பையன் உட்கார்ந்திருந்தான், அருகே இரண்டு அமர்ந்திருந்தனர். நான் அச்சிறுவனிடம், "போட்டோ எடுக்கனும், உடனே பிரின்ட் வேணும் கிடைக்குமா" என கேட்டேன். அவன் "ஓ கிடைக்குமே" என பதிலுரைத்தான். நான் யார் எடுப்பார்கள்? என கேட்டதற்கு "நான்தான்” அவன் பதில் சொன்னபோது, சற்று வியந்துபோனேன். அப்படியே அவன் என அமர்ந்திருந்த இருக்கையின் உள்ளே எட்டிப் பார்த்தேன். உள்ளே ஒரு கம்ப்யூட்டர் அருகே அமர்ந்திருந்த போடும் கருவி இருந்தன; அருகே மற்றும் போட்டோ பிரிண்ட் போடும் வாடிக்கையாளர்களின் புகைப்படத்தை சரியான அளவில் கத்தரியினால் வெட்டிக்கொண்டிருந்தான். இவங்களுக்க முடிச்சிட்டு வந்துடுரேன் என்றான் என்னிடம். நான் சற்று பேச்சு கொடுத்தேன், பெயர் அந்தோணி, ஆறாம் வகுப்பு படிக்கிறான். சுட்டித்தனமான பேச்சு, வாடிக்கையாளர்களை வளைத்துப்போடும் அவனது குறும்புத்தன பேச்சிற்கு ஈடுகொடுத்து நானும் பேசிக்கொண்டிருந்தேன். அப்பா ஆர்டருக்கு போட்டோ எடுக்க போயிருக்காரு, அப்பா இல்லாத சமயத்துல நான்தான் போட்டோ எடுப்பேன், ஸ்கூல் லீவுல அப்பாவுக்கு உதவி செய்வேன் என்றான்.

அந்த வாடிக்கையாளர்களை அனுப்பிய பின்னர், உள்ளே வாங்க என எங்களை அழைத்தான். உள்ளே சென்றபோது, ஸ்டூல் ஒன்றில் உட்காரச் செய்து, முதிர்ந்த புகைப்படக்காரர் போல, அக்கா இங்க பாருங்க, கழுத்த கொஞ்சம் கீழ, மேல, லேசா தூக்கி எனச் சொல்லி புகைப்படத்தினை எடுத்து, போதுமா, நல்லா இருக்கான்னு பாருங்க என்றான். அப்படத்தில் நாங்கள் திருப்தியானபோது உடனே சென்று பிரிண்ட் போட்டு கொடுத்தான்.

வாலிபர்களான பின்னும் குடும்பத்திற்கும், பெற்றவர்களுக்கும் உதவி செய்யாமல், அவர்களது பணத்தில் ஊர் சுற்றிக்கொண்டு, ஊதாரிகளாக அலையும் எத்தனையோ வாலிபர்களை ஒப்பிடுகையில், இச்சிறுவனைப் பெற்ற பெற்றோர் பாக்கியசாலிகள் என கண்டு வியந்தேன்; உருப்படியான புள்ள!




இரண்டு மன்னர்கள்


 
இரண்டு மன்னர்கள்


குடும்பமாகச் சுற்றுலா சென்றிருந்தோம், கன்னியாக்குமரி, திற்பரப்பு அருவி, பத்மநாதபுரம் அரண்மனை என்பது எங்களது பயண வரிசை. அதனைத் தொடர்ந்து, அலுவலக கூடுகைக்காகக் குன்னூர் சென்றிருந்தோம். இந்த பயணங்களின்போது, மறக்க இயலாது எனது நெஞ்சில் நின்ற இரண்டு மனிதர்களைப் பற்றிய கட்டுரை இது. 

பத்மநாதபுரம் அரண்மனையைச் சுற்றிப் பார்த்துவிட்டு, கடைசியாக களைப்புடன் வெளியேறும் வழியில் வந்துகொண்டிருந்தோம். சற்று இளைப்பாறலாம் என தோட்டத்தை ஒட்டிய அரண்மனையின் உட்புற படிக்கட்டு ஒன்றில் குடும்பத்தினரோடு அமர்ந்தோம். அப்பொழுது வயதான ஒரு நபர் அவ்வழியே உள்ளே நுழை வாசலின் வழியே வந்துகொண்டிருந்தார். கையில் இரண்டு பைகள், சட்டை லுங்கி அணிந்திருந்தார். அவர் படியில் ஏறி உள்ளே நுழையும்போது, அங்கு அமர்ந்திருந்த எங்களது குடும்பத்தின் சின்னஞ்சிறு மொட்டுக்களைப் பார்த்துச் சிரித்தார்; அவர் யார்? என்பதை அறியாத குழந்தைகள் பதிலுக்குப் பாசம் தரத் தயங்கியதை நான் உணர்ந்துகொண்டேன். பின்னர் என்னிடத்தில், 'இது உங்க பிள்ளைகளா?' என்று கேட்டார். நானோ, எனது மகனை மட்டும் காட்டி, இவன்தான் என்னுடைய பையன், இவர்கள் எனது குடும்பத்தின் பிள்ளைகள் என அடையாளம் சொன்னேன். நீங்க யாரு? என நான் கேட்க, நான் இங்கே வேலை செய்கிறவங்களுக்கு டீ போட்டு கொண்டுவந்து கொடுப்பேன், டீ குடிக்கிறீங்களா? என கேட்டார். பலர் இருப்பதால் பரவாயில்லை என்றேன் நான். அந்த முதியவரின் புன்சிரிப்பும், அளவளாவலும், விசாரித்துப் பேசிய விதமும் மற்றும் குழந்தைகளோடு கொஞ்ச முற்பட்டதும், அரண்மனையில் எங்களுக்குக் கிடைத்த அற்புதமான ஓர் வரவேற்பு. பத்மநாதபுரம் அரண்மனையில் இன்று அவர்தான் மன்னர் என என் உள்ளம் ஒத்துக்கொண்ட நேரம் அது. நினைவில் நின்ற அவரை எனது குடும்பத்தினருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். 



ஜெம்ஸ் ஸ்தாபனத்தின் கூடுகை ஒன்றில் பங்கேற்பதற்காக குன்னூர் சென்றிருந்தேன். இரண்டு நாட்கள் கிறிஸ்த விடுதி  ஒன்றில் தங்கியிருந்தேன். நல்ல உணவுகள் கிடைத்தன, சுவையாகவும் இருந்தன. நான் சுவைத்து உண்ணும் இந்த உணவின் சமையலுக்குச் சொந்தக்காரர் யார்? என்பதை அறிய எனது மனம் விரும்பியது. அப்படியே, ஒருநாள் காலையில் உணவினை உட்கொண்ட பின்னர், சமையல் அறைக்குள் நுழைந்தேன் நான். சிறிய அறை அது; யார் சமைக்கிறார்கள் என அங்கே விசாரித்தேன்; உடனே, நான்தான் என்று ஒரு முதியவர் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார். சாப்பாடு நன்றாக இருக்கிறது, அதனால சமைக்கிறது யாருன்னு பார்க்க ஆசைப்பட்டேன் அதான் வந்தேன் என்றேன் அவரிடம். அவர் வாங்க என பாசத்தோடு என்னை அழைத்ததோடு, என்னை சமையலறையில் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அச்சமயம் அவரைப் பற்றி சற்று விசாரிக்கத் தொடங்கினபோது, அவர் என்னிடத்தில்...

என் பெயர் கோபாலகிருஷ்ணன், பாரம்பரிய பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். சுமார் இருபது ஆண்டுகளாக மைசூர் அரண்மனையில் சமையல்காரராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அச்சமயத்தில், இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிம்மதி இல்லாமல் வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதும் நிம்மதி கிடைத்ததால், தொடர்ந்து அவரை உறுதியாகப் பற்றிக்கொண்டேன். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர், எனது பெயரை லாரன்ஸ் என மாற்றியிருக்கிறேன். எந்த ஆலயத்திற்குச் செல்வது என்பதை அறியாதிருந்ததினால், அருகிலிருந்த ரோமன் கத்தோலிக்கக் கோவிலுக்குச் செல்லத் தொடங்கினேன். இங்கே நான் ஒருவனாகத்தான் சமைக்கிறேன் என்றார். சபைகளின் வித்தியாசத்தைக் கூட அப்போது அவர் சரியாக அறிந்திருக்கவில்லை; ஆனால், இயேசு கிறிஸ்துவை அறிந்திருந்தார். அவருடனான உரையாடலில், அவர் யாருடைய வற்புறுத்துதலின் பேரிலும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. தானே தேடி கண்டுபிடித்துக்கொண்ட தாகம் அவரது தொனிகளில் தென்பட்டது. தானாக நிம்மதியின் வழியினைத் தேடி அறிந்துகொண்டாலும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அறிவில் இன்னும் சரியாக நடத்தப்படவில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். பதினைந்து ஆண்டுகளாக அங்கு சமைத்துக்கொண்டிருக்கும் அவரது உணவினைச் சுவைத்திருப்பவர் பலர்; ஆனால், அவரது வாழ்வுக்கு சுவையூட்ட ஒருவர் தேவை என்று உணர்ந்த நான், என்னையும் ஒரு மிஷனரியாக, கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவனாக அறிமுகப்படுத்திக்கொண்டு, அவருடனும் ஆவிக்குரிய சில காரியங்களைப் பகிர்ந்துகொண்டு, பாசத்துடன் விடைபெற்றேன். அவரது உணவினால் திருப்தியான நான், எனது வார்த்தைகளால் அவரை திருப்திப்படுத்தின தருணம் அது. அந்த சமையலறையில் அன்று அவருக்கு நான் சமையல்காரன். 

பல நேரங்களில் சுவைமிக்க பலவற்றிற்குச் சொந்தமானவர்களை நாம் மறந்துவிட்டு, உணவை மட்டும் சுவைத்துவிட்டு வந்துவிடுகின்றோம். நமது வாழ்க்கைக்குச் சுவையூட்டும் சொந்தக்காரர்களை நாம் அடையாளம் கண்டிருக்கிறோமா? அவர்கள் யார் என தெரியுமா? அவர்களை வாழ்த்தியிருக்கிறோமா? எத்தனையோ பேர் அவ்வப்போது வாழ்வில் இடையே வந்துநமக்கு மணமூட்டி மகிழவைக்கின்றனரே, அவர்களைக் குறித்த அறிமுகம் அவர்களது முகத்தை மலரச் செய்யும். 


செவ்வாய், 25 அக்டோபர், 2022

தூளியில் தூரமான தூக்கம்



(அனுபவம்)
 

    அக்டோபர் 21, 2022, குளிர்காலத் தொடக்க நாட்களின் கருக்கலாகிக்கொண்டிருந்த மாலை நேரம், என்னுடைய வீட்டிற்கு வருகை தந்திருந்த எனது மனைவியின் வாலிபத் தோழிகளான சக ஆசிரிய ஊழியர்களை, அவர்கள் தங்கியிருந்த ஜெம்ஸ் பள்ளி மாணவர்கள் விடுதி வரைச் சென்று விட்டு விட்டு வரும்படியாக எனது மனைவி, மகளுடன் சென்றுகொண்டிருந்தோம்; எங்களுடன், எங்களது வீட்டின் அருகே தங்கியிருக்கும் மற்றொரு சக ஊழிய சகோதரியும் தனது பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவுசெய்திருக்கும் மகளுடன் வந்திருந்தார். தோழிகளை அவர்களது வசிப்பிடத்தில் விட்டு விட்டு, சக ஊழியரான சகோதரி மற்றும் அவரது மகளுடன் நானும் எனது மனைவியும், உரையாடிக் கொண்டே வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது, பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவு செய்திருந்த அந்த சக ஊழியச் சகோதரியின் மகளை நோக்கி, 'என்னம்மா, என்ன படிக்கப் போற? வானத்துக்கு ஏறணும்னு திட்டம்போட்டாத்தான், பூமியிலையாவது உட்கார முடியும்; அதனால, உயர்ந்ததா படிக்க யோசி' என்று ஆலோசனை சொன்னேன் நான். ஆலோசனையின் வாக்கியத்தை முடித்ததும், பின்னிட்டுப் பார்த்தபோது, மிக அருகில், சகோதரர் ஒருவர் தனது மனைவியுடன் நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைக் கண்டதும், சிரித்தவாறு, விசாரித்த நான், 'அந்த மாணவிக்கு என்ன ஆலோசனை சொன்னேன் என்பதை மீண்டும் அவரிடத்தில் சொல்லியவாறு நடந்தவனாக வீடு வந்தடைந்தேன். 

      இரவு சுமார் 11:10 மணி, படுக்கையில் உடல் அசதியாகவும், அமைதியாகவும் கிடந்தபோதிலும், சிந்தனையோ சிதறிக் கிடந்தது. உறக்கம் வர அதனை மீண்டும் ஒன்றிணைப்பது என்பது இயலாததாகவே தோன்றிக்கொண்டிருந்தபோது, அந்த நாளில் நடைபெற்ற நிகழ்வுகளில், நினைவில் நிற்பவைகளை அசைபோடத் தொடங்கியது என் மனது. அப்படி அசைபோட்டுக்கொண்டிருந்த தருணத்தில், திடீரென அசையாமல் நின்றபோது, 'உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்?' (பிரசங்கி 5:6) என்ற வசனத்தோடு, 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்' (ஏசாயா 14:13-15). 'நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்' (ஒபதியா 1:4) என்ற தேவன் ஞாபகமூட்டிய வசனங்கள், நான் தவறிய தருணத்தை நினைவறியச் செய்தன. 

'வானத்துக்கு ஏறணும்னு திட்டம் போட்டாத்தான், பூமியிலையாவது உட்கார முடியும்' என்று அந்த மாணவிக்கு ஆலோசனையாக நான் கூறிய வார்த்தைகள், 'வானம் எனக்குச் சிங்காசனம்' (ஏசாயா 66:1) என்ற வசனத்திற்கு விரோதமானதாகவும், 'நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்' என்று சொன்ன தள்ளப்பட்டுப்போன தூதனுடைய வார்த்தைகளுக்கு ஒத்திருப்பதையும் உணந்து, ஆண்டவரிடத்தில் அறிக்கை செய்தேன். அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத்தேவன் பகிர்ந்தவிசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும் (ரோமர் 12:3) என்ற செய்தியும், மெல்லிய சத்தமாய் என் மனதை வந்து சேர்ந்தது. உள்ளத்தில் இருக்கும் உணர்விற்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தினேன்; எனது உதறிய உதடு, சிதறிய சிந்தனை, தவறிய பாதையினைப் புரிந்துகொண்டேன்; தூரத்திலிருந்த நித்திரை என்னை தூளிலேற்றிக்கொண்டது.  


ஞாயிறு, 17 அக்டோபர், 2021

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்

 

எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்






டிசம்பர் 9, ஞாயிறு ஆராதனைக்காக ஆலயம் சென்றடைந்தேன். ஆராதனையில் அமர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்த பின்னர், சரீரத்தில் சற்று களைப்பினை உணர்ந்தேன். களைப்பினைச் சமாளித்துக்கொண்டு, ஆராதனை முடிந்த பின்னர் வீடு செல்லலாம் என எண்ணிக்கொண்டிருந்தேன். எழுந்து நின்று ஆராதித்துக்கொண்டிருந்த அவ்வேளையில், சோர்பு அதிகமாகவே, மற்றவர்கள் நின்று ஆராதிக்கட்டும், நாம் சற்று நாற்காலியில் உட்கார்ந்துகொள்ளலாம் என்ற எண்ணம் உண்டானது. அந்த எண்ணத்தையும் தகர்த்தது தொடர்ந்து சரீரத்தில் அதிகரித்த சோர்பு. ஆம், அன்று காலை நான் அனுதினமும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைச் சாப்பிடாது வந்திருந்தேன். இதனை உணர்ந்துகொண்ட நான், உடனே எழுந்து ஆராதனையின் நடுவிலிருந்து வீடு செல்லப் புறப்பட்டு நடந்தேன், நான் உள்ளே நுழைந்த வாசலுக்கு அருகே வந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது; ஆனால், எனக்கோ அவசரத்தில், அங்கு வாசலே இல்லாதது போன்ற உணர்வு. முன்னோக்கி நடந்தேன், மகன் என்னை நோக்கி ஓடி வந்தான் விளக்கம் சொல்லி தாயிடம் அனுப்பினேன். ஆலயத்தின் முற்பகுதியின் வாசல் வழியே வெளியேறி வீடு அடைந்தேன்.

மனைவி வீடு வந்து தேனீர் தந்து, மீண்டும் ஆலயம் சென்றாள். தேனீர் அருந்தி, மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு சுமார் 10 நிமிடங்கள் படுக்கையில் சரிந்தேன். மனமோ என்னை ஆலயத்திற்கு இழுத்தது. அதனை அடக்கிக்கொள்ள இயலாது, மீண்டும் எழுந்து, ஆலயத்தை நோக்கி நடந்து சென்றேன்; பிரசங்கம் ஆரம்பித்திருந்தது. உள்ளே நுழைந்து  இருக்கையில் அமர யோசித்தவனாக. களைப்புடன், ஆத்தும பசியுடன் ஆலயத்தின் வெளியிலேயே நின்றுகொண்டு, காதுகளில் விழும் சத்தத்தைக் கேட்டவனாக  ஆத்தும ஆகாரத்தை உண்டுகொண்டிருந்தேன். சகோ.வள்ளிக்குட்டி தாமதங்களைக் குறித்துப் பிரசங்கித்து;  துரிதமாகச் செயல்படவேண்டிய காலத்தில் உள்ளோம் என்பதை வசனங்களின் வாயிலாக விளக்கிக்கொண்டிருந்தார்.
 
அப்போது, ஜெம்ஸ் தொழிற்பயிற்சி மையத்தின் ஊழியர்கள் இருவர் அவ்வழியே நடந்து வர, 'நான் வெளியே நிற்பதைக் குறித்து அவர்கள் என்ன நினைப்பார்களோ!' என் உணர்வில், நானாகவே அவர்களிடத்தில், எனது நிலையினைச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைத்தேன். ஏதாவது உதவி தேவையா? என அவ்விருவர் என்னிடத்தில் அன்பாக விசாரித்தபோது, 'நன்றி, இப்போது நலம், இடையில் உள்ளே சென்றால் பிரசங்கத்தின் நடுவே இடையூறாயிருக்கும், அத்துடன் இன்னும் களைப்பு முழுவதும் தீரவில்லை எனவே வெளியே நிற்கிறேன்' என்றேன்.
 
அப்போது, காதிலே பிரசங்கம் விழுந்துகொண்டிருக்க, கண்ணிலோ எனக்கு முன்னே நடக்கும் ஓர் உயிரின் காட்சி பதிந்துகொண்டிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த  மலர்களின் மேல், ஆனந்தமாய்ப் பறந்துகொண்டிருந்த மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சி ஒன்று தவறுதலாக செடிகள் நிற்கும் சகதிகள் நிறைந்த தரையிலே இறங்கி சகதியின் மேல் அமர்ந்தது. ஓரிரு வினாடிகள் கழித்து, மீண்டும் அது பறக்க முற்பட்டபோது, அதன் சிறகுகள், பறக்க இயலாதபடி அங்கிருந்த சகதியினால் முடக்கப்பட்டது. ஆம், ஆனந்தமான அதற்கு அது அதிர்ச்சியின் நேரம். இதனைக் கண்ட நான், எனது கையிலிருந்த கேமராவில் அக்காட்சியினைப் பதிவு செய்தேன். 'தரையிரங்கிய இடம் தவறு' எத்தனை அழகான இறக்கை, இப்படி சகதியில் சிக்கிக் கொண்டதே! என் உணர்வின் ஊடே 'சகதியான இடத்தில் பறக்கவேண்டும் தரையிரங்கக் கூடாது' என எனக்கும் ஓர் பாடம் கற்கக் கிடைத்தது. விமானமும், ஓடுதளமும் நினைவில் வந்தது.
 
ஆராதனை முடிவு பெற. நானும் அங்கேயிருந்து நடக்கத் தொடங்க, சிக்கிய வண்ணத்துப் பூச்சிக்கு 'நீ என்ன செய்தாய்' என்ற உணர்வு என்னைத் தொற்ற. கேமராவை பையில் போட்டுவிட்டு, அந்த வண்ணத்துப் பூச்சியை சகதியினின்று எடுத்து, இறக்கையில் இருந்த சகதியினைத் துடைத்து பறக்கவிட்டேன். தேவனா, 'பேதுருவோடு பேசியது போல' என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். (மத் 4:19) ஆம், அன்று ஆலயத்தில் உள்ளோர்க்கு ஒன்று, எனக்கோ இரண்டு பிரசங்கங்கள்.

ஆம், பிரியமானவர்களே! நம்முடைய வாழ்க்கையும் சில நேரங்களில் இந்த வண்ணத்துப் பூச்சியைப் போலவே சிக்கிக்கொள்ளுகின்றது. எங்கே பறக்கவேண்டுமோ அங்கே பறக்காமல், தரை இறங்கிவிடுவதினால் தவறு நேர்ந்துவிடுகின்றது; விளைவு,  எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் வாழ்க்கையோ விழுந்துவிட்ட வேலிக்குள்ளேயே சிக்கிக்கொள்ளுகின்றது. அத்தகைய தருணத்தில் தேவனது விரல்கள் நம்மை துடைத்துத் தூக்கிவிடப் போதுமானது. 

புதன், 13 அக்டோபர், 2021

மருந்து


மே 8, 2019 இருதய பரிசோதனைக்காக சென்னையில் உள்ள MMM (Madras Medical Mission)  மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன்.  மருத்துவரது அறிவுரையின்படி, உள்நோயாளிப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த எனக்கு, Angiogram எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளை செய்துகொண்டிருந்தனர் செவிலியர்கள். அப்பொழுது, எனது படுக்கையை நோக்கி வந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், உங்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சில ஆயத்தப் பணிகளைச் செய்யவேண்டும் என்றவாறு, wheel chair -ல் அமரச் செய்து அழைத்துச்சென்றார். 

உள்ளே யாருமே இல்லாத சிறியதோர் அறை; ஆங்காங்கே, சிதறிய நிலையில் சில துணிகள், சில மருத்துவ உபகரணங்கள்; அங்கிருந்த படுக்கையில் என்னைப் படுக்கவைத்தார் அந்த ஊழியர். இங்கே என்னைக் கொண்டுவந்து என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி என்னில் எழ, 'ஆடைகளைக் கழற்றுங்கள்' என்று அமைதியாகச் சொன்னார் அவர். நானோ, மேலாடையை மட்டும் கழற்றிவிட்டு, படுக்கையில் அமர்ந்திருந்தேன்; அவரோ, மீண்டும் என்னை நோக்கி, 'உங்கள் உடலில் உள்ள அத்தனை ஆடைகளையும் கழற்றுங்கள்' என்றார். ஒருபுறம் வெட்கம் என்னை வாட்டியெடுத்தாலும், அவருக்கு முன் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மருத்துவத்திற்கென்று வந்தபின் மறுப்பதும் இயலாதது என்ற மனநிலையில், அத்தனை ஆடைகளையும் கழற்றினேன். 'இரட்சிப்பின் வஸ்திரமில்லாதவர்களை பரலோகம் இப்படித்தான் பார்க்குமோ?' என்பதை அப்போது நினைவுகூர்ந்தேன்.

நிர்வாணமாக என்னைப் படுக்கவைத்து, கழுத்துக்குக் கீழே உடலில் இருந்த உரோமங்கள் அனைத்தையும் நீக்கத் தொடங்கினார் அந்த ஊழியர். பணியினைச் செய்துகொண்டே, என்னை யார்? என்றும், எங்கிருந்து வருகிறேன்? என்றும் அன்போடு விசாரித்த அவரோடு நானும் உரையாடத் தொடங்கினபோது, தனது உள்ளத்தை என்னிடத்தில் வெளிப்படுத்தி, தனது குடும்ப நிலையினை என்னோடு பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார் அவர். சென்னையில் ஏழ்மையான ஒரு குடும்பத்தில் பிறந்தவர் என்றும், உடன்பிறந்த சகோதரி திருமணமாகும் வரை, நீண்டநாட்களாக தன்னுடைய திருமணத்திற்குக் காத்திருக்க நேரிட்டது என்றும், திருமணமாகி பல வருடங்களானபின்பும் இன்னும் குழந்தைபேறு அற்ற நிலையில் தான் வாழுவதையும் அவர் கூறக் கேட்டு உள்ளம் உடைந்தேன். அவர் கிறிஸ்துவை அறியாத மனிதர் என்பதையும், போராட்டங்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதையும் அறிந்துகொண்ட நான், மேலும் அவரை விசாரித்து, கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் அறிவித்தேன். அவர் தனது பணியை முடித்தபோது, நானும் எனது பணியினை முடித்த திருப்தி எனக்கு உண்டானது. அவரது ஆத்துமாவினை நான் விசாரித்தபோது, எனது வியாதியைக்குறித்து எனக்கிருந்த மனவேதனையை அது குறைத்தது. ஆம், பிரியமானவர்களே, நம்முடைய வாழ்க்கையின் நிலை எத்தகைய சூழ்நிலையில் காணப்பட்டாலும், பிறரைக் குறித்த கவலையும், கரிசனையும் நம்மில் மிகுந்து காணப்படுமென்றால், அவர்களை விசாரிக்கவேண்டும் என்ற வேட்கை தானாகவே நமது இதயத்தில் பொங்கி எழும். நம்மைச் சந்திப்பவர்களை நாம் விசாரிக்க விசாரிக்க நம்முடைய வியாதியைக் குறித்த வேதனைக்கு அது மருந்தாகிவிடும். 

ஓர் போதகரின் மனைவியை அறிவேன். முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக பல வருடங்களாக படுக்கையிலேய தனது வாழ்நாளைக் கழித்துவந்தவர் அவர். அவர்களுடைய  சபைக்கு நான் சென்று பிரசங்கிக்கும்போதெல்லாம், ஆராதனை முடிந்ததும், ஆலயத்திற்குப் பின்னே உள்ள அறையில் படுக்கையில் இருந்த போதகரின் மனைவியைச் சென்று சந்தித்து ஜெபித்துவருவது வழக்கம். அவ்வாறு ஜெபிக்கும்போது, ஒவ்வொரு முறையும், 'ஜனங்கள் உங்களையும் உங்கள் வியாதியையும் விசாரிக்கும் முன், நீங்கள் ஜனங்களை விசாரித்துவிடுங்கள்' என்ற ஆலோசனையை தவறாமல் கூறிவிட்டு வருவேன். ஒருமுறை அந்த ஆலயத்தில் நான் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, சகோதரிகளின் பக்கத்தில் போதகரின் மனைவியைப் போன்ற தோற்றமுடைய ஒரு சகோதரி அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்; என்னால் நம்ப இயலவில்லை, யோவானது தகப்பனான சகரியாவைப் போல, ஜெபித்தும் விசுவாசமற்ற நிலையில்தான் நானும் காணப்பட்டேன். பிரசங்கித்து முடிக்கும் வரை சந்தேகம் எனது சிந்தையை நிறைத்திருந்தது. ஆராதனை முடிந்ததும், என்னை நோக்கி அந்த சகோதரி நடந்துவந்தபோது, ஒருவேளை போதகருடைய மனைவியின் சகோதரியோ! என்றே நினைத்தேன். ஆனால், போதகரின் அருகே வந்து நின்றதும், போதகரின் மனைவி என்பதை அறிந்துகொண்ட நான் ஆண்டவரை மகிமைப்படுத்தினேன். வியாதிப்படுக்கையின்போது கூறிய ஆலோசனையினை நினைவுகூர்ந்தேன். மற்றவர்களது ஆத்துமாவை விசாரித்தால், அது நம்முடைய சரீரத்துக்கே மருந்தாகிவிடும் என்பது நிச்சம்.